சரத்குமாருக்கும்.. 'சேம் பிளட்'.. பேஸ்புக்கில்!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரதமர் மன்மோகன் சிங்கை வைத்து பேஸ்புக்கில் கேலி சித்திரம் போட்டது போல, தற்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரையும், அவரது மனைவி ராதிகாவையும் வைத்து பேஸ்புக்கில் கிண்டலடிக்க ஆரம்பித்துள்ளனர்.
சரத்குமாரை, ராதிகா கிண்டலடிப்பது போல அதில் ஒரு படம் இருப்பதுதான் செம காமெடியாக இருக்கிறது.
விஜயகாந்த்துக்குக் கிடைத்த அதே மரியாதைதான் சரத்குமாருக்கும் இந்த கேலிப் படங்களில் கிடைத்துள்ளது. ஆனால் சரத்குமாரின் பேச்சும் கூட கிட்டத்தட்ட அப்படியேதான் இருப்பதால் இந்தக் கேலிப் படங்களை வெளியிடுபவர்களையும் சொல்ல முடியாது.
மாமாவைக் கிண்டலடிக்கும் சித்தி
பேஸ்புக்கில் வலம் வரும் ஒரு போட்டோஷாப் படத்தில் ராதிகா, சரத்குமாரைப் பார்த்து கிண்டலடிப்பது உள்ளது.
உறுமல் முகம்.. விழுந்து விழுந்து சிரிக்கும் ராதிகா
இந்தப் படத்தில் சிம்மராசி படத்தில் வந்த சரத்குமாரின் படத்தை போட்டுள்ளனர். பக்கத்திலேயே ராதிகா வாணி ராணி சீரியலில் வருவது போன்ற படத்தைப் போட்டு அவர் சிரிப்பது போல காட்டியுள்ளனர்.
வசனத்துக்குத்தான் காசே...
அந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள வாசகங்கள்தான் இதில் முக்கியமானவை... அதாவது நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று சரத்குமார் பேசிய பேச்சைப் போட்டு, அதற்கு ராதிகா, மாமா சொம்பை தூக்குச்சுன்னா இப்படித்தான் கண்ணு மண்ணு தெரியாம காமெடி பண்ணும் என்று ராதிகா சொல்வது போட்டு வைத்துள்ளனர்.
மாநாட்டில் சரத் பேசியது இது...
இது பேஸ்புக்கில் வரும் காமெடிப் படம். ஆனால் நெல்லையில் நடந்த மாநாட்டில் சரத்குமார் பேசியது சிலவே கூட நகைச்சுவையாகத்தான் இருந்தது. அதாவது ரசிக்க வைத்தது. அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூறுகையில், நாங்களாக கேட்க மாட்டோம். அவர்களாகப் பார்த்து கொடுத்தால் வாங்கிக் கொள்வோம் என்றார் பச்சையாகவே.
ராதிகா பேச்சு அதற்கு மேல்
அதேபோல இந்த மாநாட்டில் ராதிகா பேசும்போது சரத்குமாரை விஞ்சுவது போலப் பேசினார். கருணாநிதி வீட்டுச் சண்டை எங்க சீரியலை விட மோசம் என்று வாரினார்.
குழப்பமாகிப் போச்சே
மறக்காமல் கூட்டத்தில் தனது கணவரை நாடார் சிங்கம் என்று அழுத்தம் திருத்தமாகவும் சொல்லி விட்டுப் போனார் ராதிகா. ஆனால் பின்னர் பேசிய சரத்குமார், நாடார் சிங்கம் என்று தன்னை ராதிகா சொன்னது வேதனையில்தான் என்று கூற வந்திருந்தவர்கள் எல்லாம் , இப்ப சிங்கம்னு கூப்பிடுறதா, இல்லையா என்று குழப்பத்தில் மூழ்கிப் போனார்கள்.
விஜயகாந்த்தை டபாய்த்த ராதிகா
கூட்டத்தில் விஜயகாந்த்தையும் விடவில்லை ராதிகா. நாக்கை மடக்கி கடித்துக் கொண்டு பேச மாட்டோம் என்று விஜயகாந்த்தை நக்கலடித்தார்.
அப்பவே அவர் அப்படித்தான்
மேலும் அவர் விஜயகாந்த் குறித்துக் கூறுகையில், நான் விஜயகாந்த்துடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். அப்பவே அவர் முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதம் பிடிப்பார் என்று டபாய்த்தார் ராதிகா.
தூத்துக்குடி, நெல்லை கொடுத்தா அப்படியே ஒதுங்கிக்கலாம்
பேச்சோ பேச்சாக, தூத்துக்குடி அல்லது நெல்லை தொகுதி தங்களது கட்சிக்குக் கிடைக்காலம் என்பதையும் சூசகமாக சுட்டிக் காட்டி விட்டுப் போனார் ராதிகா.
பரவாயில்லையே...!