தலைமுடி தானம் செய்த மாணவிகளுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பாராட்டு
சென்னை: புற்றுநோயாளிகளுக்கு விக் செய்ய பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி மாணவிகள் 200 பேர் தலைமுடி தானம் செய்ததற்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை கல்லூரி சாலையில் உள்ள பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியொன்றில், கல்லூரி மாணவிகள் 200 பேர் புற்று நோயாளிகளுக்கு விக் செய்ய தேவைப்படும் தலைமுடியை தானமாக கொடுத்த நெகிழ்ச்சியான நிகழ்வு நடந்தது. இதற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலை முடி உதிர்ந்து போகிறது. அதனால் அவர்களால் வெளியே செல்ல முடியவில்லை.
அது மட்டுமல்ல தலை முடி இல்லை என்றாலே அவருக்கு புற்றுநோய் என்றும் அடையாளம் தெரிகிறது. எனவே அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விக் அவசியம். அந்த விக் செய்ய தலை முடியை தானமாக கொடுத்துள்ள மாணவிகளை பாராட்டுகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.