ஆளுநர் உரை 4 ஆண்டு கால ஆட்சியின் சாதனையை விளக்குகிறது: சரத்குமார் பாராட்டு
சென்னை: ஆளுநர் உரை அதிமுக ஆட்சியின் 4 ஆண்டு கால சாதனையை விளக்குவதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டின் முதல் சட்டசபைக் கூட்டம் நேற்று ஆளுநரின் உரையோடு தொடங்கியது. இந்த உரைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், ஆளுநரின் உரை குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டசபையின், 2015-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் கவர்னரின் உரை கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் வடிவமைக்கப்பட்ட பல்வேறு சாதனைகளை விரிவாக விளக்கும் விதமாக அமைந்துள்ளது. இலங்கையில் தமிழர்களின் சுயாட்சி மற்றும் ஜனநாயக உரிமைகள் முழுமையாக மீட்கப்பட்டு சொந்த மண்ணில் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்ட பின்னரே தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களை தாயகம் அனுப்புவது குறித்து சிந்திக்க வாய்ப்பு ஏற்படும் என்பதில் அரசு உறுதியாக இருப்பது பாராட்டுக்கு உரியதாகும்.
காவிரி ஆற்றின் குறுக்கே அணைகட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தடைவிதிக்க இடைக்கால மனு தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டிருப்பதோடு, அணைகட்டும் திட்டத்தை செயல்படுத்த மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி இருப்பதையும் வரவேற்கிறேன்.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்திய மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தைப் பெற்றிருப்பது பெருமைக்குரியதாகும். இதன்மூலம் வரும் மேமாதம் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடர்ந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை தமிழகம் ஈர்க்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications