சீமானும் நானும் நண்பர்கள், ஆனா கூட்டணி?.... சரத்குமார் விளக்கம்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் நானும் நண்பர்கள் கூட்டணி பற்றி காலம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.
Recommended Video

ராஜபாளையம் : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் நானும் நண்பர்கள் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். இருவரும் இணைந்து கூட்டணி அமைப்போமா என்பதைப் பற்றி காலம் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் சீமானும், நடிகர் சரத்குமாரும் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மத்திய பட்ஜெட் குறித்து இருவரும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்ததால் இரண்டு பேரும் இணைந்து கூட்டணி அமைப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இது குறித்து ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார் கூறியதாவது : சீமானும், நானும் ஒரே விமானத்தில் மதுரைக்கு சென்றோம். மதுரை விமான நிலையத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தோம், இதனை வைத்து நாங்கள் கூட்டணி அமைப்போமா என்று கேட்கின்றனர்.

நல்ல நண்பர்கள்
நாங்கள் இருவரும் நண்பர்கள் அரசியல் நாகரிகம் கருதி இருவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்திக்கலாம் என்று சீமானை நான் பேட்டிக்காக அழைத்து வந்தேன். பட்ஜெட் பற்றி கருத்து கேட்டார்கள், அவர் கருத்தை அவர் சொன்னார், என்னுடைய கருத்தை நான் கூறினேன்.

ஒத்த கருத்துடைய தமிழ் உணர்வாளர்கள்
எங்களின் சகோதரத்துவம் என்றும் நிலைத்திருக்கும், தமிழுக்கும் தமிழ் உணர்வுக்கும் மதிப்பு கொடுப்பவர் சீமான், நானும் தமிழர்களை மதிப்பவன். ஒத்த கருத்து உடையவர்கள் சேர்ந்து இருப்பது நல்லது தான்.

காலம் முடிவு செய்யும்
உள்ளாட்சித் தேர்தல் வந்தால் தான் மக்கள் நேரடியாக பலன்பெறுவார்கள், உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி என்று ஏற்கனவே அறிவித்துவிட்டேன். நாங்கள் கூட்டணி அமைப்போமா என்பதை காலம் தான் முடிவு செய்ய வேண்டும்.

மக்கள் முடிவெடுப்பார்கள்
தமிழக அரசு செயல்படவில்லை என்று பொத்தாம்பொதுவாக சொல்லிவிட முடியாது. ஒரு மிகப்பெரிய தலைவியை இழந்து பல்வேறு குழப்பங்களுக்கு போராட்டங்கள், எதிர்ப்புகள் மத்தியில் நிர்பந்ததத்தின் பேரில் ஆட்சியை நடத்தி வருகின்றனர். தமிழக அரசு எப்படி செயல்படுகிறது என்பதை மக்களிடம் செல்லும் போது மக்களே முடிவு செய்து தீர்ப்பு கொடுப்பார்கள் என்றும் சரத்குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications