மறைந்தார் சரவணா ஸ்டோர்ஸ் யோகரத்தினம்.. சரத்குமார் நேரில் அஞ்சலி
சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர்களில் ஒருவரான யோகரத்தினம் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் யோக ரத்னம் (76). கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று இரவு சிகிச்சைப் பலனின்றி மரணம் அடைந்தார்.
அவரது உடல் தி.நகர் ராமநாதன் தெருவில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
யோகரத்தினம் மறைவு குறித்து சரத்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் யோகரத்தினம் மறைவு மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது. மிகவும் வசதி குறைந்த குடும்பத்தில் பிறந்து சிறிய அளவிலிருந்து வணிகம் தொடங்கி இன்று நுகர்வோர் பொருட்களின் விற்பனை உலகில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவி அதன் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்கியிருக்கும் அளவிற்கு உயர்ந்திருக்கும் மாமனிதர் அவர்.
கடின உழைப்பும், உறுதியும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்ததோடு, வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டும் அளவிற்கு வரலாறு படைத்திருக்கக் கூடிய சாதனையாளரும் ஆவார்.
அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு, அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உற்றார்- உறவினர்களுக்கும், நண்பர்கள் மற்றும் அவரது நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.