திருச்செந்தூரில் தோல்வி முகத்தில் சரத்குமார்...நியூஸ் 7 கருத்துக்கணிப்பு
சென்னை: நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் போட்டியிடும் திருச்செந்தூர் தொகுதியில் திமுக வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை மண்டல வாரியாக நியூஸ் 7- தினமலர் வெளியிட்டு வருகின்றன. அதன்படி திருச்செந்தூர் தொகுதியில் நடத்திய கருத்துக் கணிப்பில் திமுகவுக்கு ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 சட்டசபை தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக சட்டசபைக்குள் நுழைந்த சரத்குமார் தற்போது இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். வலிமை வாய்ந்த திமுகவின் அனிதா ராதாகிருஷ்ணனை அவர் எதிர்த்து நிற்கிறார்.
நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பின்படி, திருச்செந்தூர் தொகுதியில் திமுகவுக்கு 46.6 சதவீத ஆதரவு காணப்படுவதாக கூறுகிறது. அதிமுகவுக்கு 27.2 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. தேமுதிக - ம.ந.கூட்டணிக்கு 12.6 சதவீத ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்சிக்கு 3வது இடமே கிடைத்துள்ளது.
முன்னதாக திருச்செந்தூரில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வாக்குச் சீட்டுக்களுக்கான பையில் மொத்தமாக வாக்குச் சீட்டுகள் போடப்பட்டிருந்ததாலும், அந்தப் பை திறந்திருந்ததாலும் அவற்றில் முறைகேடு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அந்த கருத்துக் கணிப்பை ரத்து செய்து விட்டனர். அதற்குப் பதில் நேற்று திருச்செந்தூர் தொகுதியில் 1000 பேரிடம் மீண்டும் கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளது நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பு.












Click it and Unblock the Notifications