திருச்செந்தூரில் வாடகைக்கு வீடு பிடித்த சரத்குமார்... பால் காய்ச்சி குடியேறிய ராதிகா
தூத்துக்குடி: திருச்செந்தூர் சட்டசபை தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளராக போட்டியில் சமக தலைவர் சரத்குமார், புதிதாக வாடகைக்கு வீடு பிடித்துள்ளார். அந்த வீட்டில் ராதிகா பால்காய்ச்சியதை அடுத்து அங்கேயே தங்கி பிரச்சார பணிகளை செய்து வருகிறார் சரத்குமார்.
சட்டசபை தேர்தல் களம் படு பரபரப்பாக உள்ளது. உள்ளூர் வேட்பாளரா? வெளியூர் வேட்பாளரா? யாருக்கு உங்கள் ஓட்டு என்ற பிரச்சாரம் மேலோங்கியுள்ளது.

திருச்செந்தூரில் பலம் வாய்ந்த திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து களமிறங்குகிறார் சரத்குமார். கடந்த 6 மாதங்களாகவே தேர்தல் பணிகளை செய்து வருகிறார் அனிதா ராதாகிருஷ்ணன், ஆனால் சரத்குமாரோ கடந்த ஒரு மாதமாகத்தான் பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளார்.
சரத்குமாருக்கு எதிராக பிரச்சாரம் செய்து வரும் திமுகவினரோ, சரத்குமார் சென்னைவாசி என்றும் வெற்றி பெற்றால் திருச்செந்தூருக்கு வரமாட்டார் என்றும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தென்காசி தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கும் அவர் அந்த தொகுதிக்கு எட்டி கூட பார்க்க வில்லை என்பது திமுவினரின் குற்றச்சாட்டு.
திமுகவினரின் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திருச்செந்தூர் தொகுதியில் உள்ள வீரபாண்டியபட்டணம் பாத்திமா நகரில் வாடகை வீடு பார்த்து விட்டார் சரத்குமார்.
வீரபாண்டியபட்டணம் திருச்செந்தூரை ஒட்டிய மீனவ கிராமமாகும். புது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்புசரத்குமாரின் மனைவி ராதிகா பால் காய்ச்சினார். அப்போது சமக, அதிமுக தொண்டர்களும் படையாக திரண்டு வந்து அசத்தி விட்டனராம்.
நாங்க வெளியூர் காரங்க கிடையாது. இனி இந்த ஊர்தான் எங்க ஊர் என்று கூறிய ராதிகா, விரைவில் திருச்செந்தூரில் சொந்தமாக வீடு வாங்குவோம் என்று கூறியுள்ளார் ராதிகா.
வாடகைக்கு வீடு பிடிச்சதெல்லாம் சரிதான்... ஆனால் அனிதாவின் படை பலத்திற்கு ஈடு கொடுப்பாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications