வென்றவர்களுக்கு வாழ்த்துகள்.. தோல்வியை ஏற்கிறோம்! - சரத்குமார், ராதாரவி
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தங்கள் அணி தோற்றாலும் வென்றவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ள சரத்குமார், தோல்வியை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் போட்டியிட்டன. இதற்காக சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட் எப்பாஸ் பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

மாலை 6 மணியளவில் வாக்குகள் என்னும் பணி தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. அதில் சரத்குமார் அணி முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து நேரடியான செலுத்திய வாக்குகளை எண்ணினர். பரபரப்பாக நடந்த இந்த வாக்கு எண்ணிக்கையில் பொதுச் செயலாளர் பதவிக்கு விஷால் அபாரமாய் வென்றார்.
தலைவர் பதவிக்கான தேர்தலில் சரத்குமாரைத் தோற்கடித்தார் விஷால் அணியின் நாசர்.
நாசர் 1344 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சரத்குமார் 1231 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு பேசிய சரத்குமார், "நாசர் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
தேர்தலுக்கு முன்பிருந்த காழ்ப்புணர்ச்சியை மறந்துவிட்டு, நடிகர் சங்கம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு போடப்பட்ட ஒப்பந்தம் ஏன் சிறந்தது என்பது பற்றி விளக்கிக் கூறுவேன். தேவைப்பட்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கையில் உதவி செய்வேன். இதை எனது தோல்வியாகக் கருதவில்லை, எதிர் அணியின் வெற்றியாகப் பார்க்கிறேன். நடிகர் சங்கம் சிறப்பாக செயல்பட என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்" என்று தெரிவித்தார்.

நடிகர் ராதாரவி பேசுகையில், "இந்தத் தேர்தலில் சகோதரர் விஷால் சிறப்பாகப் பணியாற்றினார். அவரது கடும் உழைப்புக்குப் பலன் கிடைத்துள்ளது. அவரை வாழ்த்துகிறேன். தோல்வியை ஏற்றுக் கொண்டு, வெற்றிப் பெற்றவர்களை வாழ்த்துகிறேன்," என்றார்.












Click it and Unblock the Notifications