எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி - மாஜி அமைச்சரை சிறையில் இருந்தே ஆஃப் செய்த சசிகலா
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள பாப்பிரெட்டிபட்டி எம்எல்ஏ பழனியப்பனை அவரது மகனை வைத்தே சமாதானம் செய்து விட்டாராம் சசிகலா.
சென்னை: மாஜி அமைச்சரும் பாப்பிரெட்டிபட்டி எம்எல்ஏவுமான பழனியப்பன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக காய் நகர்த்துவதை அறிந்த சசிகலா, சிறையில் இருந்தே இதனை முறியடித்துள்ளார். பழனியப்பனின் மகன் மூலமாகவே செக் வைத்து விட்டாராம்.
முன்னாள் அமைச்சரும், பாப்பிரெட்டிபட்டி எம்எல்ஏவுமான பழனியப்பன் தலைமையில், மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடசலம் போன்ற எம் தனி அணியாக, எடப்பாடி பழனிசாமியை மிரட்டும் விதமாகக் கடந்த சிலதினங்களுக்கு முன்பு தலைமை செயலகத்தில் சந்தித்து மனு அளித்தனர். சில கோரிக்கைகளை முன் வைத்தனர்.
எம்எல்ஏ பழனியப்பனுடன் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்பில் இருந்து வருகிறாராம். செந்தில் பாலாஜியும் கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறார்.
சசிகலா திட்டம்
பழனியப்பனின் செயல்பாடுகளை தெரிந்த முதல்வர் பழனிச்சாமி, அவரது கருத்துக்களை சசிகலா கவனத்திற்கு கொண்டு சென்றாராம். இதனையடுத்து சிறையில் இருக்கும் சசிகலா, பழனியப்பனின் மகன் எழில்மாறன் மூலமாக புதிய பிளான் ஒன்றை போட்டு கொடுத்திருக்கிறாராம்.
பழனியப்பன் மகன்
பெங்களூர் சிறை அருகில் ஹோட்டல் எடுத்துத் தங்கியிருந்து வரும் விவேக்கிற்கு துணையாக பழனியப்பன் மகன் எழில்மாறன் இருக்கிறார். விவேக் மூலம் எழில்மாறனுக்கு சில தகவல்களை கூறி அனுப்பினாராம் சசிகலா. பழனியப்பனை ஆட்சிக்கு இடைஞ்சல் செய்யாமல் ஒத்துழைப்பு கொடுக்கும்படி கூறினாராம்.
எதிர்ப்புகள் இல்லை
சசிகலாவின் உத்தரவும், புதிய வாக்குறுதிகளும் கிடைத்த பிறகுதான், தற்போது பழனியப்பன் முதல்வருடன் நெருக்கமாகி இருக்கிறாராம். இனி எதிர்ப்புகள் அதிகம் இருக்காது என்கின்றனர் அதிமுக அம்மா அணியினர்.
எல்லாரும் சமாதானமாவார்களா?
பழனிச்சாமிக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு எம்எல்ஏவை மட்டும் சமாதானம் செய்தால் போதுமா? கூவத்தூர் ரிசார்ட்டில் 122 பேரை அடைத்து வைத்து அவர்களுக்கு ஏகப்பட்ட வாக்குறுதிகளை கொடுத்துள்ளனர் சசிகலா, டிடிவி தினகரன் கோஷ்டியினர். அவர்கள் இப்போது அணி அணியாக முதல்வரை சந்தித்து வருகின்றனர். அனைவரையும் எப்படி சமாதானம் செய்யப் போகிறார் சசிகலா என்பதே இப்போதய கேள்வியாக உள்ளது.