கணவர் மீதான பாசம் என்பதெல்லாம் சசிகலா போடும் வேஷம் - தீபா பொளேர்
கணவர் மீதான பாசம் என்பதெல்லாம் சசிகலாவின் நாடகம் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: சசிகலா மனிதாபிமானம் இல்லாதவர், அரசியல் காய்களை நகர்த்தவே அவர் பரோலில் வந்துள்ளதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தீபா, சசிகலா மனிதாபிமானம் இல்லாதவர் என்பதற்கு நிறைய உதாரணம் உள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த தனது அத்தையை பார்க்க அனுமதிக்காமல் நடுரோட்டில் தன்னை நிற்க வைத்தவர் தான், தற்போது மனிதாபிமானம் பற்றி பேசுகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
சசிகலாவின் நாடகம்
அரசியல் காய்களை நகர்த்தவே அவர் பரோலில் வந்திருக்கிறார். கணவர் மீதான பாசம் என்பதெல்லாம் சசிகலாவின் நாடகம் என்றும் தீபா கூறினார்.
கூடுதல் ஆவணம் தாக்கல்
சின்னம் பெறுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றுக்கொண்டதாக வந்த செய்தி வதந்தி. மனுவை திரும்ப பெறவில்லை. வரும் 13ம் தேதி கூடுதல் ஆவணங்களுடன் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்போகிறோம்.
தொடர்ந்து குரல் தருவேன்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் ஆணையத்தால் உண்மை வெளிவராது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் வரை தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் தீபா கூறியுள்ளார்.
ஹைகோர்ட்டில் வழக்கு
சசிகலா பரோலில் வந்ததை கடுமையாக சாடியுள்ள தீபா, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிற்கு தாங்கள்தான் வாரிசு என்று கூறி வழக்கு போட்டுள்ளார் தீபா. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.