நேற்று சசி.. இன்று தினகரன்.. .நாளை திவாகரன்... அதிகாரத்தை கபளீகரம் செய்ய கதகளி ஆடும் குடும்பம்!
முறைகேடான வழியில் அதிகாரத்தைக் கைப்பற்றிவிடுவது என்பதில் சசிகலா குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் கங்கணம் கட்டிக் கொண்டு உறுதியாக உள்ளனர்.
சென்னை: இதோ கைக்கு எட்டும் தொலைவில் அதிகாரம் இருக்கிறது... இதை குறுக்கு வழியில் சென்றாவது அடைந்தே தீர வேண்டும் என்ற பேராசையுடன் வெறித்தனமாக மாறி மாறி குழிபறித்துக் கொண்டிருக்கிறது சசிகலா குடும்பத்து உறவுகள்.
1991-ம் ஆண்டு ஜெயலலிதா தேர்தலில் வென்று முதல்வரானபோது ஒட்டுண்ணிகளாக ஒட்டிக் கொண்டவர்கள் சசிகலா குடும்பத்தினர்.. ஆட்சி அதிகாரம் என்பது மக்களுக்கு சேவை செய்வதற்கு அல்ல... தங்களது குடும்பம் அரசாங்க சொத்துகளை சூறையாடி சொத்து குவிக்க மட்டுமே என புதிய விதிகளை வகுத்துக் கொண்டு களமிறங்கியது சசிகலா குடும்பம்.
அதிகாரத்தில் அமர்ந்தது ஜெயலலிதாவாக இருந்தாலும் கோலோச்சியது என்னவோ சசிகலா குடும்பம்தான்.. இதை அன்று ஜெயலலிதா அனுமதித்த காரணத்தாலேயே அவர் சிறைக்கு செல்ல நேரிட்டது. சசிகலா குடும்பத்தின் தவறுகளை அவ்வப்போது உணர்ந்தவராக ஜெயலலிதா இருந்தபோதும் ஏனோ அவர்களை அதிகமாக ஒதுக்கி வைக்காமல் விட்டு வைத்தார்.

ராஜதுரோக குற்றச்சாட்டுகள்
இதன்விளைவுதான் 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் ஜெயலலிதா வெளியிட்ட பகீர் அறிக்கை. தம்மையும் தமது ஆட்சியையும் கவிழ்க்க சசிகலா குடும்ப உறுப்பினர்கள் சதி செய்தார்கள் என்கிற ராஜதுரோக குற்றச்சாட்டை சுமத்தினார் ஜெயலலிதா. இந்த ராஜதுரோக குற்றச்சாட்டுக்களில் இருந்து எப்படியோ கடைசியாக தப்பி மீண்டும் போயஸ் கார்டனிலேயே அடைக்கலமானவர் சசிகலா.

ஜெ. மறைவுக்கு பின்னர்
ஆனால் சசிகலாவைத் தவிர அந்த குடும்பத்தைச் சேர்ந்த எவரையுமே மரணமடையும் வரையில் கிட்ட நெருங்கவே விடவில்லை ஜெயலலிதா. அந்த ஆளுமை அதுவும் பதவியில் இருந்தபடியே மறைந்ததுதான் தாமதம்... ராஜதுரோக குற்றச்சாட்டுக்குள்ளான அத்தனை கும்பலும் ஜெயலலிதாவை தாங்கிப் பிடித்தவர்களாக புதிய வேடம்போட்டு போயஸ் கார்டனுக்குள் நுழைந்தனர்.

அதிமுக டூ முதல்வர் பதவி
இந்த கோஷ்டியின் தலைவியான சசிகலா மெல்ல மெல்ல அதிமுகவை கபளீகரம் செய்தார். அதற்கடுத்ததாக கைக்கு எட்டும் தூரத்தில் இருந்த முதல்வர் நாற்காலிக்கு குறிவைத்தார். ஆனால் உச்சநீதிமன்றம் அவரை சிறைக்கு அனுப்பி பேராசையில் மண்ணைப் போட்டது.

ஏறுமுகத்தில் தினகரன்
சசிகலா சிறைக்குப் போன நிலையில் அவரது குடும்பத்தில் தடியெடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் என்பதைப் போல அதிமுகவையும் ஆட்சியையும் எப்படியும் கைப்பற்றியே தீருவது என கங்கணம் கட்டினர். இந்த போட்டியில் முன்னேறியவர் டிடிவி தினகரன் மட்டுமே. இதில் இலவு காத்த கிளியாக ஏமாந்து போனது இளவரசி மகன் விவேக்.

தினகரனுக்கு குழிபறிப்பு
எஞ்சிய சொந்தங்கள் மட்டும் சும்மாவிட்டுவார்களா? திவாகரனும் வெங்கடேஷூம் நடராஜனுடன் இணைந்து இப்போது தினகரனுக்கு குழிபறித்துக் கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் தினகரனோ சசிகலா படத்தைக் கூட போட வேண்டாம் என்கிற ரேஞ்சுக்கு முதல்வர் நாற்காலியில் அமர தொப்பியோடு ஆர்கே நகர் தொகுதியில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

விவேக்/ ஜெயானந்த் மோதல்
இந்த நிலையில் இளவரசி மகன் விவேக் படிப்பு தொடர்பாக திவாகரன் மகன் ஜெயானந்த் தரப்பு போட்டுக் கொடுத்துவிட்டது என்கிறது இன்னொரு தகவல்... அதேபோல் தினகரன் ஒருவேளை வெல்ல நேரிட்டால் தங்களுக்கு கிடைத்த அதிகாரம் அவருக்கும் கிடைக்கக் கூடாது என்பதற்காக 6 எம்.எல்.ஏக்களை ஓபிஎஸ் அணிக்கு தள்ளிவிடவும் தயாராக இருக்கிறதாம் திவாகரன் தரப்பு.

சுயமரியாதை உள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள்...
குறுக்கு வழியில் கிடைத்திருக்கும் அதிகாரத்தை, அரசாங்க சொத்தை சூறையாடி கொள்ளையடிக்கும் வெறித்தனத்தை தாம் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என சசிகலா குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் நினைக்கிறார்கள்... இவர்களைப் பொறுத்தவரை தமிழகம் ஒரு வேட்டைக்காடாகத்தான் இருக்கிறது.. இந்த பெருங்கொடுமைக்கு முடிவு கட்டுவது என்பது சுயமரியாதை உள்ள அதிமுக எம்.எல்.ஏக்களின் கைகளில் மட்டும்தான் இருக்கிறது.












Click it and Unblock the Notifications