எடப்பாடியை வளைக்க சசிகலா குடும்பத்தின் சிறப்பு யாகம்! திவாகரன் தடாலடியால் திகிலில் அமைச்சர்கள்!
இன்று சேஷபுரி கோவிலில் பரிகாரம் செய்திருக்கிறார் திவாகரன். ' அடுத்துவரக் கூடிய நாட்களில் எடப்பாடியே நமக்கு வழிவிடுவார்' என நம்புகிறார் திவாகரன்
சென்னை: அதிகாரத்துக்குள் மீண்டும் கோலோச்ச வேண்டும் என்ற எண்ணத்தில், ஜோதிடர்களை நாடி ஓடத் தொடங்கியுள்ளனர் சசிகலா உறவுகள்.
' குருபெயர்ச்சி காரணமாகத்தான் நமது குடும்பத்துக்கு அனைத்து தோல்விகளும் வந்து சேர்ந்தன. பரிகாரம் செய்துவிட்டால், மீண்டும் அதிகாரம் நம் கைக்கு வரும்' என முடிவெடுத்து, கோவில் கோவிலாக அலையத் தொடங்கியுள்ளனர்.
திருவாரூர், குடவாசலில் சேஷபுரீஸ்வரர் கோயில் உள்ளது. பரிகார பூஜை செய்வதில் மிகுந்த பிரசித்தி பெற்ற கோவில் அது. இந்தக் கோவிலுக்கு இன்று வந்த திவாகரன், ராகு-கேது பெயர்ச்சிக்குரிய பரிகார பூஜைகளைச் செய்தார். பூஜை முடிந்ததும் கோவில் குருக்களிடமும் ஆதரவாளர்களிடமும் பேசிவிட்டுக் கிளம்பினார்.

சசிகலா குடும்பத்தின் நம்பிக்கை
இந்த பூஜை குறித்து நம்மிடம் பேசிய சசிகலா உறவுகள், " பொதுவாக, சசிகலா குடும்பத்தில் உள்ளவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை அதிகம். எந்த ஒரு காரியத்தைச் செய்வதாக இருந்தாலும், ஜோதிடர்களிடம் ஆலோசிக்காமல் எதையும் செய்ய மாட்டார்கள். இதன் காரணமாக, போயஸ் கார்டனுக்குள் வரும் ஜோதிடர்கள், திறமையைப் பொறுத்து மாறிக் கொண்டே இருந்தார்கள்".

ஜெயலலிதாவின் கடவுள் நம்பிக்கை
ஜெயலலிதாவுக்கு இருந்து கடவுள் நம்பிக்கை அனைவருக்கும் தெரியும். 96ம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பிறகு ரொம்பவே முடங்கிக் கிடந்தார் ஜெயலலிதா. அரசியல் எதிரிகளின் கை ஓங்கியதால், காஞ்சிபுரத்தில் உள்ள சங்கரத்தாழ்வார் கோவிலுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். மிகுந்த நம்பிக்கையுடன் வழிபடுவதால், எதிரிகள் அழிவதாகவும் அவர் நம்பினார்.

சசிகலா, இளவரசி சிறப்பு வழிபாடு
திருப்போரூரில் உள்ள முருகன் கோவிலிலும் அவருக்காக சிறப்பு பூஜைகள் நடந்தன. மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த காலத்திலும், சசிகலாவும் இளவரசியும் திருவல்லிக்கேணி கோவிலுக்கு வந்து வழிபட்டனர். மிகுந்த கண்ணீரோடு அவர்கள் பூஜையை நடத்திவிட்டுச் சென்றனர். ' மருந்து குணப்படுத்தாததை ஜோதிடம் குணப்படுத்தும்' என்ற அளவுக்கு அவர்கள் நம்பிக்கை இருந்தது.

திவாகரனும் ஓரம்கட்டப்பட்டார்
தற்போது எடப்பாடி பழனிசாமி அரசு, சசிகலா குடும்பத்தை கட்சிக்குள்ளேயே நுழைய விடாமல் முட்டுக்கட்டை போட்டுள்ளது. தினகரன் தரப்பினர் வைத்த எந்த கோரிக்கையையும் அவர் ஏற்கவில்லை. அதேபோல், ' நாம் சொல்வதைத்தான் எடப்பாடி கேட்கிறார். இது நம்முடைய அரசு. தினகரனை ஒதுங்கி இருக்கச் சொல்லுங்கள்' என சசிகலாவிடம் நம்பிக்கையாகப் பேசிய திவாகரனும் ஓரம்கட்டப்பட்டுவிட்டார்.

எடப்பாடி பழனிச்சாமி ஆதிக்கம்
மன்னார்குடியில் அவர் நடத்த இருந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கான அனுமதியையும் ரத்து செய்தது தமிழக அரசு. அடுத்தடுத்து, கட்சியிலும் ஆட்சியிலும் நெருக்கடிகள் தொடர்வதால், மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார் திவாகரன். தினம்தோறும் சந்தித்து அட்டெண்டென்ஸ் போட்ட அமைச்சர்களே, ஒதுங்கிப் போவதை அவர் விரும்பவில்லை. இதற்கெல்லாம் காரணம், குருப்பெயர்ச்சிதான் என மன்னார்குடி ஜோதிடர் அழுத்தமாகக் கூறிவிட்டார்.

சிறப்பு பரிகாரம்
சிறையில் சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கும் குருப்பெயர்ச்சிதான் காரணம்; எதிரிகள் அழிய யாகம் நடத்த வேண்டியது அவசியம் எனவும் விளக்கியுள்ளனர். இதையடுத்து, இன்று சேஷபுரி கோவிலில் பரிகாரம் செய்திருக்கிறார் திவாகரன். ' அடுத்துவரக் கூடிய நாட்களில் எடப்பாடியே நமக்கு வழிவிடுவார்' என நம்புகிறார் திவாகரன்.












Click it and Unblock the Notifications