“தியாகத் தாயே! சின்னம்மாவே வருக”.. சசிகலாவை வரவேற்க அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பாடுகள் மும்முரம்!
சசிகலா நாளை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வர உள்ளதால் அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
சென்னை: ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நாளை சசிகலா வர உள்ளதால் வரவேற்பு ஏற்பாடு மும்முரம் அடைந்துள்ளது.
தமிழகத்தின் முதல்வராகவும், அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் இருந்து மறைந்த ஜெயலலிதாவிற்கு பிறகு அக்கட்சியின் சக்தி வாய்ந்த பொதுச் செயலாளர் பதவியை ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான சம்மதத்தை சசிகலா, முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகளிடம் நேற்று தெரிவித்தார்.

இதனையடுத்து, நாளை அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு சசிகலா வந்து 11.30 மணிக்கு பதவியேற்க உள்ளார். முறைப்படி பொதுச் செயலாளர் பணியினை தொடங்க உள்ள சசிகலாவை வரவேற்க தலைமையகம் விழாக் கோலம் பூண்டுள்ளது. சசிகலாவை வாழ்த்தி வரவேற்கும்பேனர்கள் லாயிட்ஸ் சாலையில் வைக்கப்பட்டுள்ளன. அலுவலகத்தின் நுழைவாயில் பகுதியில் ஜெயலலிதாவுடன் சசிகலா இருக்கும் பிளக்ஸ் பேனர்கள் அடுக்கப்பட்டுள்ளன. சசிகலாவின் புகழ்பாடும் "தியாகத் தாயே" "சின்னம்மா வருக" போன்ற வாசகங்கள் கொண்ட போஸ்டர்கள் சுவரெங்கும் ஒட்டப்பட்டுள்ளன.
இதனால் இந்தப் பகுதியில் காவல்துறையின் கெடுபிடி தீவிரமடைந்துள்ளன. நேற்றிரவு முதலே போலீசார், அதிமுக தலைமை அலுவலகம் இருக்கும் பகுதியின் இரு பகுதிகளிலும் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். வழக்கமாக தலைமை அலுவலகம் உள்ள பகுதியில் வாகன போக்குவரத்து இருக்கும். ஆனால் சசிகலா தலைமை அலுவலகம் வர உள்ளதால் அந்தப் பகுதியில் போக்குவரத்தை மாற்றியுள்ளனர் போலீசார்.












Click it and Unblock the Notifications