மதசார்பற்ற கட்சியாகவே அதிமுக தொடரும்.. பாஜகவுக்கு ரெட் சிக்னல் போட்ட சசிகலா?
ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அதிமுக செயல்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலராக பொறுப்பேற்றுள்ள சசிகலா தெரிவித்தார்.
சென்னை: ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டுதான் அதிமுக இனியும் செயல்படும் என பேசியிருப்பதன் மூலம் பாஜகவுக்கு மறைமுக சேதி சொல்லியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்ற பிறகு நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றி பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:

அம்மா (ஜெயலலிதா) நிர்மானித்த இந்த இயக்கம், மக்களின் இயக்கம். இந்த அரசு மக்களின் அரசு. அவர் காட்டிய வழியில்தான் நமது பாதை. அவர் காட்சிய பாதையில்தான் நமது பயணம்.
பேரறிஞர் அண்ணா, இதய தெய்வம் புரட்சி தலைவர், இதய தெய்வம் புரட்சி தலைவி, இவர்கள்தான் இந்த மாபெரும் இயக்கத்தின் அடையாளம். இவர்களை தவிர வேறு யாரும் (கையை அசைத்து காண்பித்தார்), இங்கே முன்னிலைப்படுத்தப்பட மாட்டார்கள் என்பது உறுதி.
புரட்சி தலைவரும், புரட்சி தலைவி அம்மாவும் சரி, ஜாதி, சமயங்களுக்கு அப்பாற்பட்ட மாபெரும் தலைவர்கள். அவர்களின் அந்த மகத்தான வழியில்தான் இந்த இயக்கம் இன்று வரை பயணித்துள்ளது. இனியும், அதே வழியில்தான் வீறு நடை போடும்.
நம் அம்மா எந்த வேகத்தில் இந்த இயக்கத்தை வழி நடத்தினார்களோ அந்த வேகத்தோடும், ராணுவ கட்டுப்பாடாடும் உழைக்கும் தொண்டர்களுக்கு உயர்வு கொடுத்து அழகு பார்க்க ஜெயலலிதா கொண்டிருந்த அளவுகோலில் இருந்து இம்மி கூட விலகாமல் இந்த இயக்கத்தை கொண்டு செலுத்துவோம். இவ்வாறு சசிகலா பேசினார்.
பாஜகவின் கைபொம்மையாக தமிழக அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மதம், ஜாதிக்கு அப்பாற்பட்டு அதிமுக செயல்படும் என சசிகலா பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications