கட்சியை வழிநடத்த 'சின்னம்மா' சசிகலாவே தகுதியானவராம்... சொல்வது செங்கோட்டையன், துரைசாமி, வளர்மதி
அதிமுகவை வழி நடத்த சசிகலாவே தகுதியானவர், கட்சியை வழி நடத்தும் தாய் அவர்தான் என்று அதிமுக செய்தி தொடர்பாளர்களும், நிர்வாகிகளும் கூறியுள்ளனர்.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டில் அதிமுக மூத்த நிர்வாகிகள் செங்கோட்டையன், மதுசூதனன், வளர்மதி, கோகுல இந்திரா, சைதை துரைசாமி, சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் சசிகலாவை சந்தித்தனர்.
வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக பொதுச்செயலாளரை ஏற்க வேண்டும் என சசிகலாவிடம் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தினர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் கட்சியை கட்டுக்கோப்புடன் வழிநடத்த சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
சைதை துரைசாமி
இதனைத் தொடர்ந்து ஜெயா டிவியில் செய்தியாளர்களிடம் பேசிய சைதை துரைசாமி, அம்மாவிற்கு செவிலித்தாயாகவும், பாதுகாவலராகவும் விளங்கியவர் சசிகலா அம்மையார். கட்சியை வழி நடத்தும் தகுதி அவர்களுக்குத்தான் இருக்கிறது என்று கூறினார்.
கட்டுப்பாடான தலைவர்
செங்கோட்டையன் பேசிய போது, அதிமுகவை வழிநடத்தும் தகுதி சின்னம்மாவிற்கு மட்டுமே உள்ளது என்றார். புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்குப் பின்னர், அம்மா எப்படி கட்சியை வழி நடத்தினாரோ அதே போல அம்மாவிற்குப் பிறகு சின்னம்மாதான் முழு முதல் தகுதியானவர் என்றார் செங்கோட்டையன்.
முழு தகுதி உண்டு
முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி ஆகியோர், கட்டுக்கோப்பான அதிமுக கட்சியை வழி நடத்தும் முழு தகுதியும் சின்னம்மாவிற்கே உண்டு என்றார். ராணுவக்கட்டுப்பாட்டுடன் கூடிய கட்சிக்கு சின்னம்மதான் தகுதியானவர் என்றனர்.
காப்பாற்றுங்கள் தாயே
அம்மாவிற்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்து. அம்மாவிற்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்த சின்னம்மாவிற்கு மட்டுமே கட்சியை வழி நடத்தும் தகுதி உள்ளது என்றும், காப்பாற்றுங்கள் தாயே என்று காலில் விழுந்து கேட்கிறோம் என்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் ஜெயாடிவியில் பேசினர்.
ஜெயலலிதா
நேற்று வரை மூச்சுக்கு மூச்சு அம்மா அம்மா என்று பேசிய வாய்கள் இன்று அதை விட இரு மடங்காக சின்னம்மா சின்னம்மா என்று பேசுவதை தூணின் ஓரத்தில் படமாக வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா அமைதியாக பார்த்துக்கொண்டுதான் இருந்தார்.