இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க சசிகலா வலியுறுத்தல்
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சசிகலா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அனுமதியின்றி இலங்கை கடல்பரப்பில் மீன்பிடித்ததாகக் கூறி, தமிழக மீனவர்கள் பலரையும் அந்நாட்டு கடற்படை சிறைபிடித்துச் செல்வது வாடிக்கையாக உள்ளது. இதன்படி, இதுவரை 51 மீனவர்களை இலங்கை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளது.
அவர்களை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக, சமீபத்தில் இலங்கை அரசு, இந்தியாவிடம் தெரிவித்துள்ளது. இதன்பேரில் அந்த மீனவர்கள் விடுதலையை துரிதப்படுத்தி, அவர்களை பாதுகாப்பாக மீட்டு, தமிழகம் கொண்டுவந்து சேர்க்க வேண்டும். மீனவர்களின் மீன்பிடி உரிமையை பாதுகாக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.
மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகளை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு உதவ வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் சசிகலா தெரிவித்துள்ளார்.