கணவர் நடராஜனை கண்ணீர் மல்க நலம் விசாரித்துவிட்டு தி நகர் திரும்புகிறார் சசிகலா!
பெரும்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை சந்தித்து சசிகலா நலம் விசாரித்தார்.
சென்னை: பெரும்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் கணவர் நடராஜனை பரோலில் வந்துள்ள சசிகலா இன்று சந்தித்தார். கணவரிடம் கண்ணீருடன் நலம் விசாரித்த சசிகலா பிற்பகலில் மருத்துவமனையில் இருந்து தான் தங்கியிருக்கும் தி நகருக்கு புறப்பட்டார்.
சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்க கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரை காண சசிகலா 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு கர்நாடக சிறை கடும் நிபந்தனைகளுடன் 5 நாட்கள் மட்டுமே பரோல் வழங்கியது.
கையை அசைத்தப்படி சென்றார்
இதைத்தொடர்ந்து நேற்று மாலை 3 மணிக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து புறப்பட்ட சசிகலா இரவு 9.50 மணிக்கு தி.நகரில் இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணப்ரியாவின் வீட்டுக்கு வந்தார். காரில் இருந்து இறங்கிய சசிகலா, தொண்டர்களைப் பார்த்து கையை அசைத்தபடி வீட்டுக்குள் சென்றார்.
சசிகலாவுக்கு நிபந்தனைகள்
இன்று மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் தனது கணவர் நடராஜனை சசிகலா சந்திப்பார் என கூறப்படுகிறது. சசிகலா அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்க கூடாது, கட்சி, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது, மருத்துவமனைக்கு மட்டும்தான் செல்ல வேண்டும், மருத்துவமனை மற்றும் வீட்டில் பார்வையாளர்களை சந்திக்கக் கூடாது, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கணவர் அருகில் இருந்து கவனித்து கொள்ளலாம், பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளையும் சிறை நிர்வாகம் விதித்துள்ளது.
கண்ணீருடன் நலம் விசாரிப்பு
கணவர் நடராஜனை கண்ணீருடன் அவர் நலம் விசாரித்ததாக கூறப்படுகிறது. சசிகலாவுடன் அவரது உறவினர்கள் சிலரும் மருத்துவமனைக்கு சென்றனர்.
2 மணி நேரத்தில் புறப்பட்டார்
நடராஜனை சந்தித்த சசிகலா மாலை வரை அவருடன் இருப்பார் என கூறப்பட்டது. ஆனால் சுமார் 2 மணி நேரம் மட்டுமே மருத்துவமனையில் இருந்த அவர் பின்னர் மீண்டும் தான் தங்கியிருந்த கிருஷ்ணப்பிரியாவின் தி.நகர் வீட்டுக்கு புறப்பட்டார். மாலை 6 மணி வரை மருத்துவமனையில் இருக்க சிறை நிர்வாகம் அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சசிகலாவுக்கு வரவேற்பு
மருத்துவமனைக்கு செல்லும் வழியிலும் மருத்துவமனைக்கு வெளியேயும் சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 5 நாள் பரோலில் வந்துள்ள சசிகலா
வரும் 11ஆம் தேதி மாலை சிறைக்கு செல்லவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.