போயஸ் கார்டனில் நுழைய நடராஜன் 'வகையறாக்களுக்கு' க்ரீன் சிக்னல் தராத சசிகலா!
அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்க தயாராகிவிட்டார் சசிகலா. அதே நேரத்தில் கணவர் நடராஜனின் சொந்தங்களுக்கு போயஸ் கார்டனில் நுழைய அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.
சென்னை: ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் கார்டனில் நுழைவதற்கு கணவர் நடராஜனின் சொந்தங்களுக்கு இன்னமும் சசிகலா அனுமதி தரவில்லை என கூறப்படுகிறது.
ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த போது சசிகலாவின் ஒட்டுமொத்த குடும்பமே 'சிரித்தபடி' வளைத்துக் கொண்டது. அங்கும் கூட நடராஜன் ஒரு ஓரமாகத்தான் உட்கார வைக்கப்பட்டார்.
பரபர பேட்டி
என்னதான் தம்மை இயக்குபவராக நடராஜன் இருந்தாலும் அதை வெளிப்படையாக காட்டிக் கொள்வதை சசிகலா விரும்பவில்லையாம். இருந்தபோதும் தமக்கான இருப்பை வெளிப்படுத்தும் வகையில்தான் ஜெயலலிதாவை புதைத்த மண் காய்வதற்குள்ளாகவே அதிமுகவின் எதிர்காலம் குறித்து பரபரப்பாக பேட்டி கொடுத்தார் நடராஜன்.
சசிகலா வியூகம்
தற்போது அதிமுகவின் தலைமையை ஏற்க சசிகலாவும் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார். முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட ஒட்டுமொத்த அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளின் ஆதரவை வாங்கிவிட்டார் சசிகலா.
சசிகலா உத்தரவு
ஆனாலும் சசிகலா தலைமையை ஏற்க முடியாது என அதிமுக தொண்டர்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். இதனிடையே தம்முடைய மன்னார்குடி குடும்பத்தில் மகாதேவன் உள்ளிட்டோரை போயஸ் கார்டனுக்கு வரக் கூடாது என சசிகலா உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒன்லி ரிமோட் கண்ட்ரோல்
அதேபோல் கணவர் நடராஜனைத் தவிர அவரது சொந்தங்களை போயஸ் கார்டனுக்குள் நுழையக் கூடாது என உத்தரவிட்டுள்ளாராம் சசிகலா. அவரைப்பொறுத்தவரையில் கணவர் நடராஜன் அரசியலில் தம்மை வழிநடத்தும் ரிமோட் கண்ட்ரோலாக மட்டுமே இருக்கட்டும்; அவரது குடும்பத்தினரின் பிடியில் சிக்கிவிடக் கூடாது என நினைக்கிறார் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.