முதல்வர் பதவி பற்றியெல்லாம் சசிகலா யோசிக்கவில்லை.. மாஃபா பாண்டியராஜன் சொல்கிறார்
முதல்வராக சசிகலா அவசரம் காட்டவில்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் பொங்கலுக்கு பிறகு தீர்ப்பு வெளியாகிவிடும் என்ற தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.
சென்னை: முதல்வராக பதவியேற்பது குறித்து சசிகலா தங்களிடம் பேசவில்லை என்றும், மக்கள் பிரச்சினைகளை தீர்க்கவே அவர் அறிவுறுத்தியுள்ளதாகவும், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சசிகலா முதல்வராவாரா என்பது குறித்து கேள்விக்கு, தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மாஃபா பாண்டியராஜன் இதுகுறித்து கூறியது: "சின்னம்மா மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவே அறிவுறுத்தியுள்ளார். பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள்கள் போய் சேர்ந்துவிட்டதா, மாணவர்களுக்கு புத்தகங்கள் போய் சேர்ந்துவிட்டதா. ஏன் தாமதம் ஆகிறது.. அதை பாருங்கள். இதில் கவனம் செலுத்துங்கள், என்றுதான் அவர் கூறிவருகிறார். விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை பாருங்கள்" என்றுதான் கூறி வருகிறார்.
இவ்வாறு மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் பொங்கலுக்கு பிறகு தீர்ப்பு வெளியாகிவிடும் என்ற தகவல் பரவியதால் சசிகலா முன்கூட்டியே முதல்வராக முயல்வதாக செய்திகள் வந்தன.
ஆனால், தீர்ப்பு தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் மாஃபா பாண்டியராஜன் பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது.