அதிமுகவுக்கு தலைமைக்கு ஏற்கும் தகுதி இருக்கிறதா? சசிகலாவுக்கு நாஞ்சில் சம்பத் அதிரடி கேள்வி!
சசிகலாவை எனக்குத் தெரியாது... அதிமுகவுக்கு தலைமை ஏற்க தகுதி இருக்கிறதா என்பதை சசிகலா நிரூபிக்க வேண்டும் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவுக்கு தலைமை ஏற்கும் தகுதி இருக்கிறதா? என்பதை சசிகலா நிரூபிக்க வேண்டும் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி மரணமடைந்தார். அவருக்குப் பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் தலைமையைத் தவிர வேறு தலைமையை ஏற்க முடியாதவர்கள் அதிமுகவில் இருந்து விலகி வருகின்றனர். அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் எந்த வித பேட்டியும் தராமல் ஒதுங்கியிருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு ஜெயலலிதா அளித்த இன்னோவா காரை இன்று ஒப்படைத்து விட்டார் நாஞ்சில் சம்பத். இதனையடுத்து அவர் அதிமுகவில் இருந்து விலகி வேறு கட்சியில் சேரப்போவதாக தகவல் வெளியானது.

நாஞ்சில் சம்பத்
இந்த நிலையில் தான் அதிமுகவில் இருந்து விலகவில்லை என்று நாஞ்சில் சம்பத் சன் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அதிமுக இயக்கத்தின் பிரச்சாரத்துக்காக கார் என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. அந்த காரை கட்சியின் பிரச்சாரம், கட்சிக் கூட்டத்துக்குத் தவிர என்னுடைய சொந்த உபயோகத்திற்காக ஒருநாள்கூட பயன்படுத்தவில்லை. கடந்த 8 மாதங்களாக பிரச்சாரம் இல்லை. இனி பிரச்சாரம் இருக்கவும் வாய்ப்பில்லை.

அதிமுகவில் இருக்கிறேன்
நான் அதிமுகவில்தான் இருக்கிறேன். அழைத்தால் போய் பேசுவேன் என்று கூறிய சம்பத், தை பிறந்தால் வழிபிறக்கும் என்றார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் அரசு நிர்வாக திறமை குறையவில்லை என்றும் தெரிவித்தார். ஜெயலலிதா உடல்நலம் குறைவால் இயக்க நடவடிக்கை இல்லை என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

சசிகலாவை தெரியாது
எனக்கு சசிகலாவைத் தெரியாது. நான் சந்தித்ததும் இல்லை என்றும் நாஞ்சில் சம்பத் கூறினார். சசிகலாவுக்கு தகுதி இருக்கிறதா என்பதும் தெரியாது என்று தெரிவித்த நாஞ்சில் சம்பத், சசிகலா தனது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இலக்கியத்தில் தீவிரம்
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் எந்த வித பேட்டியும் தராமல் ஒதுங்கியிருந்தார். இப்போது அளித்துள்ள பேட்டி அதிரடியாக உள்ளது. சசிகலாவைப் பற்றியும், தை பிறந்தால் வழி பிறக்கும் கூறியுள்ளதை வைத்து பார்த்தால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவார் என்றே கூறப்படுகிறது. இதன்காரணமாக தீவிர இலக்கிய பணியில் இறங்கப் போவதாக கூறியுள்ளார் நாஞ்சில் சம்பத்.












Click it and Unblock the Notifications