மதுரையில் காமராஜர் சிலைக்கு திடீரென மாலை அணிவித்த சசிகலா புஷ்பா... திமுகவுக்கும் பாராட்டு!
சென்னை: போலி முன்ஜாமீன் வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜராக வந்த சசிகலா புஷ்பா திடீரென காமராஜர் சிலைக்கு மாலை அணித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதேபோல் திமுகவுக்கும் பாராட்டு தெரிவித்து ஆச்சரியப்படுத்தினார்.
போலி முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மதுரை நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா ஆஜராக வந்துள்ளார். இன்று மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிம் நிதானமாக, ஆணித்தரமாக பேசியதுடன் எம்பி பதவியை ஒருபோதும் ராஜினாமா செய்யவே முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதன் பின்னர் திடீரென காமராஜர் சிலைக்கு தமது ஆதரவாளர்களுடன் சென்று மாலை அணிவித்தார். சசிகலா புஷ்பா, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது முதலே தம்முடைய நாடார் சமூகம் தமக்கு ஆதரவளித்து வருகிறது எனக் கூறி வருகிறார்.
இதனைத் தொடர்ந்து மூத்த வழக்கறிஞர்கள் ஜ்மல்கான், சுபாஷ்பாபு ஆகியோருடன் வழக்கை எதிர்கொள்வது எப்படி என்று ஆலோசனையில் ஈடுபட்டார் சசிகலாபுஷ்பா. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா, தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு தரக் கூடிய இயக்கம் திமுகதான் என்றும் பாராட்டு தெரிவித்தார்.