டெல்லியை விட்டு வெளியேறி விட்டாரா சசிகலா புஷ்பா?... எங்கு போனார் என்று தெரியவில்லை!
டெல்லி: முதல்வர் ஜெயலலிதா தன்னை அடித்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியதால், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா அவரது டெல்லி வீட்டில் இல்லை என்று தகவல் பரவியுள்ளது. அவர் எங்கே என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. அவர் வெளிநாடு போய் விட்டதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பைக் கூட்டியுள்ளன.
அதிமுகவின் ராஜ்யசபா எம்.பியாக வலம் வந்தவர் சசிகலா புஷ்பா. சமீபத்தில் டெல்லி விமான நிலையத்தில் இவர் திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவாவை அறைந்து பரபரப்பில் சிக்கினார். இந்த விவகாரம் தொடர்பாக சசிகலா புஷ்பாவை போயஸ் தோட்ட இல்லத்திற்கு அழைத்து முதல்வர் ஜெயலலிதா விசாரித்ததாக கூறப்பட்டது.
அடுத்த நாள் ராஜ்யசபா கூட்டத்திற்கு வந்த சசிகலா புஷ்பா, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தனது தலைவர் தன்னை அடித்து விட்டதாகவும், தன்னை எம்.பி பதவியிலிருந்து விலகுமாறு கட்டாயப்படுத்துவதாகவும் கூறி அழுது புலம்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து உடனடியாக அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.

பரபரப்புப் பேட்டி
ராஜ்யசபாவில் பேசியதோடு நிற்காமல் தனது வீட்டில் செய்தியாளர்களையும் சந்தித்து பேட்டி கொடுத்தார் சசிகலா புஷ்பா. அப்போது எந்தப் பிரச்சினை வந்தாலும் தான் சமாளிக்கத் தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.

மாமனார் வீடு தாக்குதல்
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் கரைச்சுத்து உவரியில் உள்ள அவரது மாமனார் வீடு தாக்குதலுக்குள்ளானது. இதைத் தொடர்ந்து அவரது வீடுகளுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில்தான் சசிகலா புஷ்பா தங்கியிருந்தார். அவர் தமிழகம் வருவதைத் தள்ளிப் போட்டுள்ளார்.

சசிகலாவைக் காணவில்லை
ஆனால் தற்போது சசிகலா புஷ்பா டெல்லி வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. அவர் யாரிடமும் போனில் பேசாமல் உள்ளார். அவரது வீட்டு போனை அடித்தாலும் அவர் பேசுவதில்லை என்று கூறப்படுகிறது. அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் வீட்டுக்குப் போன செய்தியாளர்களிடம் அவர் வெளியர் போயிருப்பதாக மட்டும் கூறுகின்றனர்.

வீட்டுக்குள்ளேயே இருக்கிறாரா?
சசிகலா புஷ்பா பாதுகாப்பு கருதி தனது வீட்டுக்குள்ளேயே இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேசமயம், அவர் வேறு ஒரு வீட்டுக்குப் பாதுகாப்பு கருதி இடம் பெயர்ந்துள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடு போய் விட்டாரா?
சசிகலா புஷ்பா வெளிநாடு ஒன்றுக்குப் போய் விட்டதாக ஒரு தகவல் கூறுகிறது. இல்லை இல்லை டெல்லியை விட்டு அவர் வெளியேறியுள்ளார். ஆனால் எங்கு போனார் என்பது தெரியவில்லை என்று இன்னொரு தகவல் கூறுகிறது. மொத்தத்தில் சசிகலா புஷ்பா எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. குழப்பமாக உள்ளது.

24 மணி நேர பாதுகாப்பு
சசிகலா புஷ்பாவின் வீட்டுக்கு டெல்லி போலீஸார் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரப் பாதுகாப்பு அவரது இல்லத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications