தினகரன் குடும்ப கஸ்டடியில் சசிகலா... எதுவும் 'போட்டுக் கொடுக்க முடியாமல்' தவிக்கும் சொந்தங்கள்
பரோலில் வந்துள்ள சசிகலாவிடம் சொந்தங்கள் யாரும் தம்மை பற்றி போட்டுக் கொடுத்துவிடாதபடி ரொம்ப கவனமாக இருக்கிறாராம் தினகரன்.
Recommended Video
தஞ்சாவூர்: பரோலில் வந்துள்ள சசிகலா தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றார். இதனால் தினகரனுக்கு எதிராக எந்த ஒரு கருத்தையும் சசிகலாவிடம் தெரிவிக்க முடியாமல் சொந்தங்கள் தத்தளிக்கின்றனராம்.
' பரோல் காலம் முடியும் வரையில் சசிகலாவை விட்டு நகரக் கூடாது' என்பதில் உறுதியாக இருக்கிறார் தினகரன். ' தன்னைப் பற்றி யாரும் எதுவும் சொல்லிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் தினகரன். அவர் இல்லாத நேரங்களில் அவர் மனைவி அனுராதா அல்லது மகள் ஜெய ஹரிணி ஆகியோர் உடன் இருக்கின்றனர்' என்கின்றனர் குடும்ப ஆட்கள். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற நாட்களில் இருந்தே, தினகரனின் நடவடிக்கைகளைப் பற்றி சசிகலாவிடம் தெரிவித்து வந்தனர் கட்சி நிர்வாகிகள் சிலர்.
உச்சகட்டமாக, இளவரசி குடும்பத்தினருடன் நேரடி மோதலைக் கடைபிடித்துவந்தார் தினகரன். இதையடுத்து, தினகரனுக்கு பல்வேறு ஆலோசனைகளைக் கூறியிருந்தார் சசிகலா. இதையெல்லாம் அவர் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. நடராஜன் மரணத்தையொட்டி, 15 நாள் பரோல் விடுப்பில் வந்த சசிகலா, தஞ்சாவூரில் தங்கியிருக்கிறார். தினகரன், அவரது குடும்பத்தார், விவேக் ஜெயராமன் ஆகியோர் மட்டுமே அவரைச் சுற்றி அமர்ந்துள்ளனர்.
தினகரன் தீவிர நடவடிக்கை
இதுபற்றிப் பேசும் உறவினர்கள் சிலர், " தினகரனின் தனிக்கட்சி முயற்சியால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு தனிக்கட்சி இருக்குமா? இரட்டை இலையை மீட்க முடியுமா? எனப் பல சந்தேகங்கள் வலம் வருகின்றன. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், உறுப்பினர் சேர்க்கை உள்பட கட்சி விவகாரங்களை கவனித்து வருகிறார். சசிகலா பரோல் காலம் முடியும் வரையில், அவரை யாரும் குழப்பிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் தினகரன்.
சமாதானம் இல்லை
தன்னைப் பற்றி யாராவது சொல்கிறார்களா என்பதையும் கண்காணித்து வருகிறார். சசிகலாவைத் தனியாக விட்டுவிட்டால், தேவையற்ற குழப்பங்களை சிலர் ஏற்படுத்தக் கூடும் என நினைக்கிறார் தினகரன். எனவேதான், குடும்ப ஆட்களை சசிகலா அருகில் அமர வைத்திருக்கிறார்" என்றவர், " தனிக்கட்சி முடிவால் குடும்ப ஆட்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு மூலையில் பிரிந்திருக்கிறார்கள். ' இது தற்காலிக முடிவுதான். நம்மை நோக்கித்தான் அனைவரும் வருவார்கள். இரட்டை இலையைக் கைப்பற்றுவோம்' என தினகரன் எவ்வளவு கூறினாலும், யாரும் சமாதானம் அடைவதுபோலத் தெரியவில்லை.
தினகரன் இருப்பதால் பேசவில்லை
எனவே, சசிகலாவிடம் தனிப்பட்ட முறையில் பேசுவதற்கும் சிலர் தயாராகி வருகிறார்கள். ' டெல்லியில் நமக்கான முக்கிய சோர்ஸ் ஒன்று இருக்கிறது. அவர்கள் மூலம் அணுகலாம். நம்முடைய செல்வாக்கை அவர்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள்' எனத் தெரிவிக்கும் முயற்சியிலும் சிலர் இறங்கினர். தினகரன் அருகில் இருப்பதால் எதுவும் சாத்தியப்படவில்லை. குடும்ப உறவினர்களிடையே நிலவும் சொத்துப் பிரச்னை, குடும்பத் தகராறுகள் என பலவித குழப்பங்களுக்கு ஆள்பட்டிருக்கிறார் சசிகலா.
சிறையே மேல்
நடராஜன் படத் திறப்பு விழா முடிந்ததும், பெங்களூரு சிறைக்குச் செல்ல இருக்கிறார். பரோல் காலம் முடிவதற்குள் சிறைக்குச் செல்லும் முடிவில் இருப்பதற்கு குடும்ப மோதல்கள்தான் காரணம்" என்றார் விரிவாக. மன்னார்குடி கோஷ்டிகளோடு மல்லுக்கட்டுவதைவிட, பரப்பன அக்ரஹாரா சிறை எவ்வளவோ மேல் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் சசிகலா. ' கட்சியோடு குடும்பத்தோடு மோதிக் கொண்டு மனஅழுத்தத்தை அதிகரித்துக் கொள்வதைவிட, சிறைக்குள்ளேயே இருந்துவிடலாம்' என நொந்து போய் புலம்பிக் கொண்டிருக்கிறார் சசிகலா.