பிப். 14க்கு முன் பதவியேற்காவிட்டால் எப்போதும் முதல்வராக முடியாது - சசியிடம் சொன்ன ஜோதிடர்
பிப்ரவரி 14ஆம் தேதிக்கு முன் சசிகலா பதவியேற்கா விட்டால் அவரால் முதல்வராக பதவியில் அமர முடியாது என்று ஜோதிடர்கள் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: உலகமே காதலர் தினம் கொண்டாடி வரும் நேரத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு சசிகலாவிற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 14ஆம் தேதிக்கு முன்பாக அதாவது பிப்ரவரி 7 அல்லது 9ஆம் தேதியே முதல்வராக சசிகலா பதவியேற்கா விட்டால் பின்னர் எப்போதும் பதவியேற்க முடியாது என்று ஜோதிடர்கள் கூறியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஜோதிடர்கள் சொன்னது தற்போது உண்மையாகியுள்ளது.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு முதல்வராக நள்ளிரவில் பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம். அதிமுக பொதுச்செயலாளராக 25 நாட்களில் பதவியேற்றார் சசிகலா. ஏன் இந்த அவசரம் என்று பலரும் முணுமுணுத்தனர்.
அதே அவசரத்தோடு ஜெயலலிதா மறைந்த 60 நாட்களில் சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டு முதல்வராக பதவியேற்கவும் நாள் குறித்தார் சசிகலா. ஆனால் ஆளுநரின் வருகை தாமதமாகவே பதவியேற்பது தள்ளிப்போனது.

முதல்வர் பதவியேற்பு
ஜோதிடத்தின் மேல் நம்பிக்கை கொண்ட சசிகலா, ஜோதிடர்கள் குறித்து கொடுத்த பிப்ரவரி 7ஆம் தேதி அல்லது பிப்ரவரி 9ஆம் தேதியன்று பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆளுநரின் வருகை தள்ளிப்போகவே சசிகலா பதவியேற்பது எப்போது என்ற கேள்வி எழுந்தது. ஜோதிடர் குறித்து கொடுத்த நேரத்தில் பதவியேற்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது.

பிப்ரவரி 7 மவுன புரட்சி
முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சசிகலாவின் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த ஓபிஎஸ், அமைதியாக வீடு திரும்பினார். எதுவும் சொல்லாமல் இரண்டு நாட்கள் வீட்டில் இருந்த அவர் 7ஆம் தேதி இரவு மெரீனா கடற்கரைக்குப் போய் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் 40 நிமிடம் தியானம் செய்தார்.

சராமரி குற்றச்சாட்டு
சசிகலா மீது தொடர்ந்து புகார் கூறிய ஓபிஎஸ், விடிய விடிய தூங்காமல் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். சசிகலாவும் அமைச்சர்களுடன் போயஸ் தோட்டத்தில் ஆலோசனை நடத்தினார். பொருளாளர் பதவியில் இருந்து இரவோடு இரவாக நீக்கினார். ஆனால் தன்னை நீக்க முடியாது என்று கூறி கட்சியின் வங்கிக் கணக்கை முடக்கினார் ஓ.பன்னீர் செல்வம்.

ஓபிஎஸ் விஸ்வரூபம்
கார் டயரை தொட்டு கும்பிட்டு விசுவாசம், பணிவு என்று என்று வலம் வந்த பன்னீர் செல்வம், திடீர் என சசிகலாவிற்கு எதிராக விஸ்வரூபம் எடுத்தார். தொடர்ந்து கிரீன் வேஸ் சாலையில் புதன்கிழமை முதலே தொண்டர்கள் கூட்டம் குவிந்து வருகின்றனர். ஆதரவாளர்கள்,எம்எல்ஏக்கள் அணிமாறி வருகின்றனர்.

சசிகலா அணி
தனது ஆதரவு எம்எல்ஏக்களை கொண்டு போய் ரிசார்ட்டில் சிறை வைத்தார் சசிகலா. மாறு வேடத்தில் தப்பி வந்தும் எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். எம்எல்ஏக்களுடன் சென்று ரிசார்ட்டில் தங்கினார் சசிகலா. முதல்வர் நாற்காலி யாருக்கு என்பதில் ஓபிஎஸ், சசிகலா இடையே ஏற்பட்ட போட்டி ஒருவாரம் நீடித்தது.

எதிராக வந்த தீர்ப்பு
சசிகலாவிற்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதன் மூலம் அவரது முதல்வராகும் கனவு கலைந்தது. ஆனாலும் எடப்பாடி பழனிச்சாமியை சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்துள்ளார் சசிகலா. அவரையாவது ஆட்சிமைக்க அழைக்க வேண்டுமே என்பதே சசிகலாவின் கவலை.

ஜோதிடர் சொன்னது பலித்தது
பிப்ரவரி 14ஆம் தேதிக்கு முன்பாக சசிகலா முதல்வராக பதவியேற்கா விட்டால் ஒருபோதும் முதல்வர் நாற்காலியில் அமரமுடியாது என்று ஜோதிடர்கள் சசிகலாவிடம் அடித்துக்கூறினர். அதற்காக தைப்பூசம் நாளான பிப்ரவரி 9ஆம் தேதி பதவியேற்புக்கு நாளும் குறித்து கொடுத்தனர். அவரால் பதவியேற்க முடியவில்லை. இப்போது உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு சசிகலாவின் முதல்வர் கனவுக்கு சாவு மணி அடித்துள்ளது. ஜோதிடர்கள் சொல்வது சில நேரம் பொய்க்கலாம் ஜோதிடம் பொய்ப்பதில்லை என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications