அப்பல்லோவில் ஜெ. சிகிச்சை பெற்றபோது சசிகலாவை தவிர வேறு யாரும் பார்க்கவில்லை.. திவாகரன் அதிரடி
ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சைப் பெற்றபோது அவரை சசிகலாவை தவிர வேறு யாரும் பார்க்கவில்லை என திவாகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஆஜரான திவாகரன் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சைப் பெற்றபோது அவரை சசிகலாவை தவிர வேறு யாரும் பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஜெயலலிதா ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கடந்த ஜனவரி 17ஆம் தேதி மன்னார்குடியில் நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் பேசிய திவாகரன், அப்போலோ மருத்துவமனை அறிவிப்பதற்கு முதல்நாளே, அதாவது டிச.4-ம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.
கிளினிக்கல் டெத், பயாலஜிக்கல் டெத்
அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து அன்றிரவே தனது பேச்சை மறுத்த திவாகரன் மருத்துவத் துறையில் கிளினிக்கல் டெத், பயாலஜிக்கல் டெத் என இருவகை உண்டு.
கிளினிக்கல் டெத்
அப்போலோ மருத்துவமனையில் டிச.4-ம் தேதி மாலை 5.15 மணிக்கு ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இது கிளினிக்கல் டெத் என கூறுவர்.
பயாலஜிக்கல் டெத்
இதைத் தொடர்ந்து கருவிகள் உதவியோடு பயாலஜிக்கல் டெத் ஆகிவிடாமல் உயிரைக் காப்பாற்ற முடியுமா என மருத்துவர்கள் முயற்சி எடுத்து வந்தனர். அப்போலோ மருத்துவர்களிடம் இருந்துதான் நான் இந்த தகவலை தெரிந்துகொண்டேன் என்று கூறினார்.
திவாகரன் ஆஜர்
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி கமிஷனில் திவாகரன் இன்று ஆஜரானார். பல்வேறு ஆவணங்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் சசிகலாவின் சகோதரர் திவாகரன் ஆஜரானார்.
பெரும் எதிர்பார்ப்பு
ஏற்கனவே சசிகலா குடும்பத்தில் பெரும் மோதல் நிலவி வருகிறது. தினகரனும் திவாகரனும் எதிரும்புதிருமாக உள்ள நிலையில் ஆறுமுகசாமி கமிஷனில் திவாகரன் என்ன கூறப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
தெளிவாக கூறினேன்
இந்நிலையில் 4 மணி நேர விசாரணைக்குப் பிறகு விசாரணை ஆணைய அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த திவாகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜெயலலிதாவுக்கான சிகிச்சை உள்ளிட்டவை குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் தெளிவாக கூறினேன் என்றார்.
2 முறை சென்றேன்
ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே இறந்து விட்டதாக தகவல் வந்தது; அதைதான் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் தெரிவித்தேன் என்றும் திவாகரன் தெரிவித்தார். ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அப்போலோவிற்கு 2 முறை சென்றதாக திவாகரன் கூறினார்.
சசிகலா மட்டும்தான் பார்த்தார்
ஆனால் இரண்டு முறையும் ஜெயலலிதாவை உயிருடன் பார்க்க முடியவில்லை என்றும் இறந்தபின்பே பார்த்தேன் என்றும் திவாகரன் கூறினார். சசிகலாவை தவிர வேறு யாரும் ஜெயலலிதாவை அப்போலோவில் பார்க்கவில்லை என்றும் திவாகரன் திட்டவட்டமாக கூறினார்.