சசிகலா தரப்பினர் இத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது... இல்லாவிட்டால்.... ஓபிஎஸ் எச்சரிக்கை
சசிகலாவின் குடும்பத்தினர் குறித்த ரகசியங்களை வெளியிடுவேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எச்சரிக்கை விடுத்தார்.
Recommended Video

நாமக்கல்: சசிகலாவின் குடும்பத்தினர் குறித்த ரகசியங்களை வெளியிடுவேன் என்று நாமக்கல்லில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
நாமக்கல்லில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மீள வேண்டும் என்று எம்ஜிஆர் போராடினார்.
இதன் முடிவாக தமிழகத்தில் எம்ஜிஆர் தலைமையில் ஆட்சி அமைந்தது. அவரை தொடர்ந்து ஜெயலலிதா மக்களுக்கு தேவையான திட்டங்களை தீட்டினார். தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் பொற்கால ஆட்சி நடைபெற்று வருகிறது.

கெடுக்க சதி
ஜெயலலிதாவால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஆட்சி தொடரக் கூடாது என்று சிலர் சதி திட்டம் தீட்டுகிறார்கள். அதை முறியடிக்கும் சக்தி தொண்டர்களிடம் உள்ளது. அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது. மலையுடன் மோதினால் தலை உடைந்து சிதறும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்.

குறுக்கு வழியில்...
திமுக குறுக்கு வழியில் ஆட்சிக்கு வரத் துடிக்கிறது. ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் திமுகவோடு கூட்டணி சேர்ந்து கொண்டு இந்த ஆட்சியை கலைக்க நினைக்கிறார்கள். ஜெயலலிதா இல்லாத ஆட்சி தானே என சிலர் துள்ளி விளையாட நினைக்கின் றனர். இந்த நினைப்பு உள்ளவர்களும் தமிழக மக்களின் துணையோடு கிள்ளி எறியப்படுவார்கள்.

சுயநலம் இல்லை
நானும், எடப்பாடி பழனிச்சாமியும் சாதாரண நிலையில் இருந்து தான் இந்த நிலைக்கு உயர்ந்து உள்ளோம். எங்களை பார்த்து சுயநலத்திற்காக இணைந்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் சுய நலத்துக்காக ஒரு குடும்பத்திற்கு கட்சியையும், ஆட்சியையும் கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர்.

16 பேர் நீக்கம்
2014-ம் ஆண்டில் சசிகலா குடும்பத்தை சேர்ந்த 16 பேரை கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கினார். அப்போது என்னை அழைத்து, தினகரனுடன் பேசக்கூடாது என ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு முறையும் என்னை அழைத்து கூறியதுண்டு. ஏற்கனவே சசிகலா குடும்பம் குறித்த ரகசியத்தில் 10 சதவீதம் சொல்லி உள்ளேன்.

இன்னும் ரகசியம் உள்ளது
இன்னும் 90 சதவீதம் உள்ளது. அவர்கள் தொடர்ந்து என்னை ஏதாவது சொன்னால், நானும் தொடர்ந்து பல ரகசியங்களை வெளியிடுவேன். இதனால் இதோடு அவர்கள் பேச்சை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கிறேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications