அண்ணன் மகன் மகாதேவன் இறுதி சடங்கில் பங்கேற்க பரோலில் வருகிறார் சசிகலா?
சசிகலா அவரது அண்ணன் மகன் மகாதேவன் இறுதி சடங்கில் பங்கேற்க சிறையிலிருந்து பரோலில் வெளியே வருவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: மாரடைப்பால் மரணமடைந்த அண்ணன் மகன் மகாதேவனுக்கு அஞ்சலி செலுத்த சசிகலா, சிறையிலிருந்து பரோலில் வெளியே வருவார் என்று கூறப்படுகிறது.
சசிகலாவின் 2வது அண்ணன் வினோதகனின் மகன், மகாதேவன் (47) இன்று மாரடைப்பால் காலமானார். இவர் தஞ்சையில் வசித்து வந்தவர்.
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, ஜெ. பேரவை மாநில செயலாளராக சில காலம் இவர் பணியாற்றியவர். தஞ்சை வட்டாரத்தில் அதிமுகவில் ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளவர் மகாதேவன். 2011ல் சசிகலா மற்றும் அவரது உறவினர்களை அதிமுகவிலிருந்து ஜெயலலிதா நீக்கினார். அப்போது மகாதேவனும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பிறகு கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், இன்று, திருவிடைமருதூர் கோயிலுக்கு சாமி தரிசனத்திற்காக மகாதேவன் இன்று சென்றார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நிலைமை மோசமாக இருந்ததால், அவர் கும்பகோணத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சசிகலா குடும்பம் சோகம்
ஆனால், கும்பகோணம் மருத்துவமனையில் அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், மகாதேவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் சசிகலா குடும்பத்தில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது. மகாதேவனை பொறுத்தளவில், கறைபடியாத கைகளுக்கு சொந்தக்காரர் என்ற பெயர் பெற்றவர்.இல்லாதவர்களுக்கு கொடுப்பாரே தவிர, பிறரிடமிருந்து பறிக்க மாட்டார் என்ற பெயர் தஞ்சை வட்டாரத்தில் எதிர்க்கட்சியினராலும் சொல்லப்படுகிறது.

சசிகலாவின் பாசத்திற்கு உரியவர்
அதேபோல, ஆன்மீகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர். அடிக்கடி, கும்பகோணம் உள்ளிட்ட சுற்றுவட்டார திருத்தலங்களுக்கு யாத்திரை செல்வது அவரது வழக்கம். மகாதேவனின் நற்பண்புகளால், சசிகலாவுக்கு அவர் மீது மிகுந்த பாசம் உண்டு. தனது அண்ணன் பிள்ளைகளில், மகாதேவன் சசிகலாவுக்கு செல்லமாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், மகாதேவனின் இறப்பு செய்தியை அறிந்ததும், சசிகலா மிகுந்த சோகமடைந்துள்ளார்.

பரோலில் வெளியேவரும் சசிகலா
ஏற்கனவே நீரிழிவு நோயால் அவதிப்படும் சசிகலாவுக்கு, மகாதேவன் இறப்பு செய்தி, இன்னும் வேதனையை கொடுத்துள்ளது. மகாதேவன் இறுதி சடங்கில் பங்கேற்க சசிகலா பெங்கூர் சிறையிலிருந்து பரோலில் வெளியே வருவார் என அடித்துக் கூறுகிறார்கள் அதிமுக வட்டாரத்தில். மகாதேவன் இறுதி சடங்குகள் நாளை நடைபெற வாய்ப்புள்ளது. எனவே அதற்குள்ளாக சசிகலா தஞ்சை செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிடிவி தினகரன் அஞ்சலி
இதனிடையே அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச்செயலாளரும், சசிகலாவின் அக்கா மகனுமான டிடிவி தினகரன், அவரது தாய் மாமா மகனான மகாதேவன் உடலுக்கு அஞ்சலி செலுத்த தஞ்சை செல்ல உள்ளார்.












Click it and Unblock the Notifications