எம்ஜிஆர் காதுகேளாதோர் பள்ளிக்கு சசிகலா கொடுத்த ரூ10 லட்சம் செக் பவுன்ஸ்- கருவிகளும் பறிமுதல்!
எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்தில் உள்ள காதுகேளாதோர் பள்ளிக்கு சசிகலா கொடுத்த ரூ10 லட்சத்துக்கான செக் பவுன்ஸ் ஆகிவிட்டது.
சென்னை: எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்தில் உள்ள காதுகேளாதோர் பள்ளிக்கு சசிகலா கொடுத்த ரூ10 லட்சம் செக் பவுன்ஸ் ஆகிவிட்டது. அத்துடன் காதுகேட்கும் கருவிகளுக்கு பணம் தராததால் அந்த கருவிகளும் குழந்தைகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கொடுமை நிகழ்ந்துள்ளது.
ஜெயலலிதாவைப் போல குளோனிங் செய்து கொண்டு சசிகலா நடத்திய நாடகங்களில் ஒன்றுதான் எம்ஜிஆர் இல்லத்துக்கு சென்றது. எம்ஜிஆர் பிறந்த நாளான ஜனவரி 17-ந் தேதியன்று ராமாவரம் தோட்டத்துக்கு சென்றார் சசிகலா.
நன்கொடை
அங்கு எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்ததுடன் லதா ராஜேந்திரன் நடத்தி வரும் காதுகேளாதோர் பள்ளிக்கு ரூ10 லட்சத்துக்கான செக் ஒன்றையும் வழங்கினார். அதேபோல் 240 குழந்தைகளுக்கு ரூ19 லட்சம் மதிப்பிலான காதுகேட்கும் கருவிகளையும் கொடுத்தார்.
செக் பவுன்ஸ்
சசிகலா கொடுத்த செக்கை வங்கியில் டெபாசிட் செய்திருந்தார் லதா. ஆனால் கணக்கில் பணம் இல்லை என சசிகலா கொடுத்த செக்கை திருப்பி அனுப்பிவிட்டது வங்கி. இதனால் லதா ராஜேந்திரன் நொந்து போனார். இதை யாரிடம் சொல்வது என தெரியாமல் புலம்பித் தவித்தார் லதா.
கருவிகளுக்கு பணம் தரவில்லை
இந்நிலையில் சசிகலா வழங்கிய காதுகேட்கும் கருவிகளுக்கும் உரிய பணம் தரப்படவில்லையாம். இந்த பணத்துக்காக கருவிகளை கொடுத்த நிறுவனம் நடையாய் நடந்ததுதான் மிச்சம்.
கருவிகள் பறிமுதல்
வெறுத்துப் போன அந்த நிறுவனம் காதுகேளாதோர் பள்ளிக்கு வந்து 240 குழந்தைகளிடம் இருந்தும் கருவிகளையும் பறித்துக் கொண்டு போய்விட்டதாம். இதனால் லதா ராஜேந்திரன் கடும் அதிர்ச்சியில் இருக்கிறாராம்.