களையெடுக்கப்படும் சசிகலா புஷ்பா ஆதரவாளர்கள்... அதிமுகவினர் கலக்கம்
திருநெல்வேலி: அதிமுகவில் சசிகலா புஷ்பா விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருவதால் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து களையெடுக்கப்பட்டு வருகின்றனர். இதனால் யார் எப்போது நீக்கப்படுவோம் என்ற கலக்கத்தில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட அதிமுகவினர் உள்ளனர்.
எம்பி சசிகலா புஷ்பா மாநிலங்களவையில், முதலமைச்சர் தன்னை அடித்ததாகவும், எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மிரட்டுவதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது பகிரங்கமாக குற்றம்சாட்டி பேசினார். இதனால் அவர் தொடர்ந்து மிரட்டலுக்கு ஆளாகி வருகிறார்.

அவரது எம்பி பதவியை ராஜினமா செய்ய கட்சி தலைமை நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆனாலும் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று உறுதியாக பேசி வருகிறார் சசிகலா புஷ்பா. இதனால், மேலும் கோபமடைந்த அதிமுக தலைமை தொடர்ந்து சசிகலா புஷ்பாவிற்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் சசிகலா புஷ்பா வீட்டில் பணிபுரிந்த பானுமதி என்பவர் சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் மகன் ஆகியோர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும்,இதற்கு சசிகலா புஷ்பா மற்றும் அவரது தாயார் உடந்தையாக இருந்ததாகவும் புகார் தெரிவித்தார். இதன் பேரில், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்டு மதுரை கிளையில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தன்னை 6 வாரங்களுக்கு கைது செய்ய முடியாத அளவிற்கு உச்சநீதிமன்றத்திலும் தடை உத்தரவு பெற்றுள்ளார் சசிகலா புஷ்பா..
சசிகலா புஷ்பாவின் வீட்டில் இருப்போருக்கு இப்படி ஒரு தொல்லை என்றால் அதிமுகவில் இருந்து கொண்டு சசிகலாவுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் அதிமுக நெருக்கடி கொடுத்து வருகிறது. யார் யார் எல்லாம் சசிகலா புஷ்பாவுடன் தொடர்பில் இருக்கின்றனரோ அவர்களை எல்லாம் அமைப்பில் இருந்து நீக்கி வருகிறது அதிமுக தலைமை.
சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்கள் அதிமுகவில் வகித்து வந்த கட்சி பதவி ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகிறது. முதலில் அதிமுக மாநில அமைப்பு செயலாளராகவும், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளராகவும் இருந்த நாராயண பெருமாளின் பதவி பறிக்கப்பட்டது. பின்னர், பணகுடி பேரூராட்சி தலைவர் லாரன்ஸ், புறநகர் மாவட்ட இளைஞரணி செயலர் விஎஸ்ஆர் ஜெகதீஸ் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.
தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சண்முகநாதனின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு செல்லப்பாண்டியன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் வகித்து வந்த பால் வளத்துறை அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அதிமுகவினரில் சசிகலா புஷ்பா ஆதரவாளர்களை களையெடுத்து வருவதால், இம்மாவட்டங்களில் உள்ள அதிமுக பொறுப்பாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications