நிதானம் இழக்கிறாரா சசிகலா.. ஒரே நாளில் 2 முறை மிரட்டல் தொனியில் பேச்சு!
ஒரே நாளில் 2 முறை மிரட்டல் தொனியில் சசிகலா பேசியுள்ளதால் அவர் நிதானம் இழக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: ஒரே நாளில் 2வது முறையாக மிரட்டல் தொனியில் சசிகலா பேசியுள்ளது பரபரப்பைக் கூட்டியுள்ளது.
முதல்வர் பதவியை அடைய சசிகலா மிக மிக வேகம் காட்டுகிறார், அவசரப்படுகிறார், அதனால் நிதானத்தை இழக்க ஆரம்பித்துள்ளார் என்று அரசியல் நிபுணர்கள் இதைப் பார்க்கிறார்கள்.

முதலில் இன்று பிற்பகலில் போயஸ் தோட்ட வளாகத்தில் கூடிய தனது ஆதரவாளர்களிடையே அவர் பேசுகையில், ஓரளவுக்குத்தான் பொறுமையாக இருக்க முடியும். அதற்கு மேல் போனால் செய்ய வேண்டியதைச் செய்வோம் என்று அவர் கூறியிருந்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவின் பேச்சு வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டது.
இந்தப் பேச்சைத் தொடர்ந்து அவர் கூவத்தூருக்குப் புறப்பட்டார். அங்கு கிட்டத்தட்ட 3 மணி நேரம் எம்.எல்.ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் போயஸ்தோட்டம் திரும்பிய அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். காரில் உட்கார்ந்தபடியே அவர் பேசுகையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மன உறுதியுடன் உள்ளனர். எம்.எல்.ஏ.,க்களுடான சந்திப்பு மனநிறைவாக இருந்தது. ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் ஆளுநர் காலம் கடத்துவது கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கையாக கருதுகிறேன். இதுவரை பொறுமையாக இருந்தோம். நாளை வேறு விதமாக போராடும் என்றார்.
இதுவரை பொறுமையாக இருந்தோம். நாளை வேறு விதமாக போராடுவோம் என்று அவர் கூறியுள்ளதும் கூட மிரட்டல் தொனிதான் என்று சலசலப்பு எழுந்துள்ளது. இப்படி ஒரே நாளில் அடுத்தடுத்து மிரட்டல் தொனியில் பேசியிருப்பதன் மூலம் சசிகலா தரப்பு பிரச்சினை செய்யும் திட்டம் எதையும் கையில் வைத்துள்ளதா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications