ஜெ. வெற்றிக்காக கோயில் கோயிலாகச் சுற்றும் சசிகலா... இன்று ஸ்ரீரங்கம், பிள்ளையார்பட்டி
ஸ்ரீரங்கம்: முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தனது அண்ணன் மகள் பிரபாவதியுடன் இன்று ஸ்ரீரங்கம் கோயிலில் அதிமுகவின் வெற்றிக்காக தரிசனம் செய்தார்.
இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. கட்சித் தலைவர்கள் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்க, அவர்களது நலம் விரும்பிகள் கோயில் கோயிலாகச் சென்று சாமி கும்பிட்டு வருகின்றனர்.

அந்தவகையில், அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, சமீபகாலமாக ஊர் ஊராகச் சென்று ஆலய தரிசனம் செய்து வருகிறார்.
அதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட சசிகலா, இம்மாதத் தொடக்கத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும், அதனைத் தொடர்ந்து பழனி முருகன் கோயில் போன்றவற்றிற்கும் சென்று தரிசனம் செய்தார்.
இந்நிலையில், இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றார் சசிகலா. கருடாழ்வார், தன்வந்திரி, ராமானுஜர், தாயார் சன்னதி ஆகிய சன்னதிகளுக்கு அங்குள்ள பேட்டரி கார் மூலம் சென்று தரிசனம் செய்தார். சசிகலாவுடன் அவரது அண்ணன் மகள் பிரபாவதியும் இருந்தார்.
பின்னர் ஸ்ரீரங்கம் ஜீயரை சந்தித்து இருவரும் ஆசி பெற்றனர். இதையடுத்து சமயபுரம் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த சசிகலா, திருச்சி சங்கம் ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.
அதனைத் தொடர்ந்து பிள்ளையார்பட்டி புறப்பட்டுச் சென்றார் சசிகலா. அங்கு சசிகலா விரைவாக தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும், ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும், அவர் மீதுள்ள சுப்ரீம் கோர்ட் வழக்கிலிருந்து விடுதலையாக வேண்டும் என்று அவர் கோவில் கோவிலாகப் போய் சாமி கும்பிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications