சசிகலா vs தீபா போஸ்டர் யுத்தம்... நல்ல வேடிக்கைதான் போங்க!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிற்கும் ஜெ., அண்ணன் மகள் தீபாவிற்கும் இடையேயான போஸ்டர் யுத்தம் வலுத்து வருகிறது.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், கட்சி தலைமையை அவரின் சசிகலா ஏற்று வழி நடத்திச் செல்ல வேண்டும் என அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் சசிகலாவை சந்தித்து பேசி வருகின்றனர். சசிகலாவிற்கு ஆதரவு பெருகி வருவதால், ஜெயலலிதா வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவியை அவர் ஏற்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
சின்ன அம்மா கட்சியை வழி நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பல பகுதிகளில் அதிமுக நிர்வாகிகள் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

போஸ்டர் யுத்தம்
சசிகலாவின் தலைமையை பிடிக்காத சில தொண்டர்கள், சசிகலா உள்ள போஸ்டர்களை கிழித்து விடுகின்றனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை முன்னிறுத்தி போஸ்டர்கள் அடித்து வருகின்றனர். இதனால் சசிகலா, தீபா இடையே போஸ்டர் யுத்தம் ஏற்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் தீபா ஆதரவு
தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி ஆகிய இடங்களில் இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.அம்மாவின் குல விளக்கே.. ஆளப் பிறந்தவளே.. தமிழகத்தின் இதய துடிப்பே.. என்கிற ரீதியில் வாசகங்கள் போட்டு போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.

அதிமுக தொண்டர்கள்
தனது அத்தையான ஜெயலலிதாவை போயஸ் கார்டன் சென்று தீபா பலமுறை சந்திக்க முயன்ற போதும், ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட போதும், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பின்னால் சசிகலாதான் இருக்கிறார் என தீபா பகீரங்கமாக குற்றம் சாட்டினார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ராஜாஜி அரங்கில் வந்து அஞ்சலி செலுத்தினார் தீபா. அவரது நினைவிடத்திற்கும் வந்து அஞ்சலி செலுத்தினார் அப்போது ஏராளமான அதிமுக தொண்டர்கள் தீபாவிடம் ஆர்வத்துடன் பேசினர்.

ஆதரவு போஸ்டர்கள்
சசிகலா பொதுச்செயலாளராக பதவியேற்பதற்கு அதிமுக தொண்டர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் தீபாவிற்கு ஆதரவாகவும் போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர். தென்காசி அருகே பாவூர்சத்திரம் பகுதியில் தீபாவிற்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தீபாவிற்கும் சசிகலாவிற்கும் இடையே உருவாகியுள்ள போஸ்டர் யுத்தம் அதிமுகவில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

எப்போது முடியும்?
தமிழகத்தில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் போஸ்டர் யுத்தம் அரசியல் கட்சிகளிடையே ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அதிமுகவிற்கு யார் தலைமை ஏற்பது என்பதில் இப்போது போஸ்டர் யுத்தம் நிலவுகிறது. இது எப்போது முடியும் என்று அதிமுகவின் உண்மை தொண்டர்கள் கவலையுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications