பிப்.8,9-ல் முதல்வர் பதவியேற்க நாள் குறித்த சசிகலா... ஆடுபுலி ஆட்டத்தை தொடங்கிய மத்திய அரசு!
முதல்வர் பதவியேற்க நாள் குறித்து வைத்து காத்திருக்கிறார் சசிகலா. ஆனால் சசிகலாவை முதல்வர் நாற்காலியில் அமர விட கூடாது என மும்முரமாக இருக்கிறதாம் மத்திய அரசு.
சென்னை: தமிழக முதல்வராக முதல்வர் பதவியேற்பதற்காக பிப்ரவரி 8 அல்லது 9-ந் தேதியை தேர்வு செய்து வைத்திருக்கிறார் சசிகலா. ஆனால் மத்திய அரசோ சசிகலா முதல்வராவதைத் தடுக்கும் வகையில் கடும் நெருக்கடிகளைக் கொடுக்க தொடங்கியுள்ளது.
முதல்வர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு தாமே முதல்வராக வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறார் சசிகலா. அதேநேரத்தில் வழக்குகளை காரணம் காட்டி நான் முதல்வராகிறேன் என சசிகலாவின் கணவர் நடராஜன், தம்பி திவாகரன் மல்லுக்கட்டி வந்தனர்.

நாள் குறித்த சசிகலா
தற்போது நடராஜனும் திவாகரனும் சற்று ஒதுங்கிக் கொள்ள சசிகலா முதல்வர் நாற்காலியில் அமர தீவிரம்காட்டி வருகிறார். தமிழக பொறுப்பு ஆளுநர் ஆளுநர் வித்யாசகர் ராவின் சென்னை வருகை தொடர்பான விவரங்களை கேட்ட போயஸ் கார்டன் பிப்ரவரி 8 அல்லது 9-ந் தேதி முதல்வர் பதவி ஏற்க இருப்பதாக தகவல் தெரிவித்திருக்கிறது.

பதில் தராத ஆளுநர் மாளிகை
ஆனால் ஆளுநர் மாளிகையில் இருந்து எந்த ஒரு பதிலும் இதுவரை தரப்படவில்லை. சசிகலாவின் இந்த தீவிர முயற்சியைத் தொடர்ந்து ஆளுநர் வித்யாசகர் ராவுக்கு மத்திய அரசு கண்டிப்பான ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளதாம்.

ஓபிஎஸ் நேரில் வரட்டும்
அதாவது முதல்வர் பதவியில் இருந்து தாம் விலகுவதாக ஓ. பன்னீர்செல்வம் நேரில் வந்து கடிதம் கொடுத்தால் மட்டுமே ஏற்க வேண்டும்; பேக்ஸ் மூலமாகவோ வேறு நபர்களோ வந்து கொடுத்தால் அதை ஏற்கவே கூடாது என கூறப்பட்டுள்ளதாம்.

பரபர அரசியல் களம்
அத்துடன் சசிகலா தொடர்பான வழக்கு விவகாரங்களிலும் மத்திய பாஜக அரசு தீவிரம் காட்ட தொடங்கியுள்ளதாம். மத்திய அரசின் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் அருண்ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டை பாராட்டி அறிக்கை எழுத சொன்னாராம் சசிகலா. சசிகலா மற்றும் மத்திய அரசின் அடுத்தடுத்த நகர்வுகளால் தமிழக அரசியல் களம் பரபரத்துக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications