கமிஷன் முன்பு ஆஜராகாமல் இருக்க சசிகலா செய்த தில்லாலங்கடி வேலைகள்... விட்டு பிடிக்கும் ஆறுமுகசாமி
ஆறுமுகசாமி கமிஷன் முன்பு விசாரணைக்கு ஆஜராவதை தடுக்கவே அதன் முன்பு சசிகலா கோரிக்கை மீது கோரிக்கையாக வைப்பதாக கருத்து நிலவுகிறது.
Recommended Video

சென்னை: சசிகலாவிடம் விசாரிக்க வேண்டும் என்று ஆறுமுகசாமி சம்மன் அனுப்பியும் அவரிடம் கோரிக்கைகளாக முன்வைத்து வருவது கமிஷன் முன்பு அவர் ஆஜராகாமல் இருப்பதற்காகவே என்று கூறப்படுகிறது.
ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்தார்.
அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அவர் கடந்த நவம்பர் மாதம் முதல் தனது விசாரணையை தொடங்கியுள்ளார்.

தப்பிக்கவே மவுன விரதம்
ஆறுமுகசாமி கமிஷன் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், நெருக்கமாக இருந்த அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் சசிகலாவிடமும் விசாரணை நடத்தப்படலாம் என்பதால் அவர் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி மௌன விரதத்தை கடைபிடித்து வந்தார். கமிஷனில் விசாரணையிலிருந்து அவர் தற்காலிகமாக தப்பிக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

மௌன விரதம் என தகவல்
அதுபோல் சசிகலாவின் உறவினர்களின் வீடுகளில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ரெய்டின்போது கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த வருமான வரித் துறை சம்மன் அனுப்பியும் மௌன விரதம் இருந்து வருவதால் தன்னால் பிப்ரவரி 10-ஆம் தேதி வரை ஆஜராக இயலாது என்று சசி பதிலளித்தார்.

நீதிபதியிடமே கேள்வி
இதனிடையே சசிகலாவிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி கமிஷனும் சம்மன் அனுப்பியது. போகாத ஊருக்கு வழி தேடுவதை போன்று விசாரணை கமிஷனில் இருந்து தப்ப என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்ய சசிகலா முடிவு செய்தார். அதன்படி தன் மீது புகார் கொடுத்தவர்கள் யார் என்று நீதிபதியிடமே சசிகலா கேள்வி எழுப்பினார். மேலும் அதை கொடுத்தால் மட்டுமே சம்மனுக்கு பதில் தர முடியும் என்று கறாராக தெரிவித்தார்.

ஆணையம் ஒப்புதல்
இதற்கும் ஆறுமுகசாமி கமிஷன் ஒப்புதல் அளித்தது. அப்படியும் விடாமல் மற்றொரு கோரிக்கையை அவர் முன் வைத்தது சசிகலா தரப்பு. அதாவது விசாரணை கமிஷன் விசாரணை நடத்தும் நபர்களிடம் தங்கள் தரப்பு வழக்கறிஞரும் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று சசிகலா கோரினார். தற்போது அதற்கும் ஆணையம் ஒப்புதல் அளித்துவிட்டது.

விட்டு கொடுக்கும் கமிஷன்
இதுபோன்று ஆணையத்தின் முன்பு அவர் ஆஜராகக் கூடாது என்பதற்காகவே கோரிக்கைகள் என்ற பெயரில் ஆறுமுகசாமிக்கு நெருக்கடிகளை கொடுத்து வந்தார். இந்த கோரிக்கைகளுக்கு அவர் ஒப்புக் கொள்ள மாட்டார் என்றே சசி எதிர்பார்த்தார். ஆனால் ஜெயலலிதா இறக்கும் வரை அவருடன் இருந்த சசிகலாவிடம் விசாரணை நடத்தியே தீர வேண்டும் என்று ஆறுமுகசாமி உள்ளார். இதன் பிறகாவது சசிகலா ஆணையத்தின் முன்பு ஆஜராவாரா இல்லை இன்னும் ஏதேனும் கோரிக்கையை வைத்து விசாரணையில் இருந்து தப்புவாரா என்பது போக போகத்தான் தெரியவரும்.












Click it and Unblock the Notifications