அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்பார்.. சொல்கிறார் மதுரை ஆதினம் !
அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்பார் என்று மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.
சென்னை: சசிகலாவை அதிமுகவுக்கு தலைமை ஏற்க அக்கட்சி மூத்த நிர்வாகிகள் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்பார் என்று மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு காலமானார். இதனையடுத்து தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றார். ஆனால் கட்சியின் அதிகாரமிக்க பொதுச் செயலாளர் பதவி இன்னும் காலியாகவே உள்ளது. அதிமுகவில் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் என்றாலும், கட்சி விதிகளின்படி, போட்டியின்றி ஒருமனதாகவே பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
இந்த நிலையில் அதிமுகவின் அடுத்த தலைவர் யார் ? என்ற கேள்வி தமிழகத்தில் எழுந்துள்ளது. அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தான் அதிமுக-வின் அடுத்த தலைவராக வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஒருபுறம் நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தாலும் தொண்டர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று போயஸ் கார்டன் வந்த மதுரை ஆதினம், ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறினார். இதன் பின்னர் போயஸ் கார்டன் இல்லம் முன்பு செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதினம், அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்பார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை போல ஓ.பன்னீர் செல்வம் தமிழகத்தை ஆட்சி செய்வார் என்று கூறினார்.