தூக்கு போட்டதால் சசிபெருமாள் மரணம்... உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்
சென்னை: மதுவிலக்குக்கோரி செல்போன் டவரில் ஏறி போராடியபோது உயரிழந்த காந்தியவாதி சசிபெருமாளின் மரணம் தூக்குப் போட்டுக் கொள்வதால் ஏற்படும் உயிரிழப்புப் போல இருக்கிறது என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடை பகுதியில் இருந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய போது சசிபெருமாள் திடீரென உயிரிழந்தார்.
அவரது திடீர் மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து மதுவிலக்கு கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது.
இந்நிலையில், சசிபெருமாள் மரணம் குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக் கோரி அவரது மகன் விவேக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "எனது தந்தையின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. இதனால் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்" என்று கூறி இருந்தார்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்றம், நேற்றைக்குள் பதில் அளிக்க தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், " மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே சசிபெருமாளின் உயிர் பிரிந்துள்ளது.
அவரது மரணம் தூக்குப் போட்டுக் கொள்வதால் ஏற்படும் உயிரிழப்புப் போல இருக்கிறது என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இவ்வழக்கின் விசாரணையை, வரும் 31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.