கழுத்தில் கயிறு இறுக்கி உயிரிழந்தாரா சசிபெருமாள்? போஸ்ட் மார்ட்டம் அறிக்கை சொல்வது என்ன?
கன்னியாகுமாரி: சசி பெருமாள் சாவுக்கு அவரது கழுத்தில் கயிறு இறுக்கியதே காரணம் என பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உண்ணாமலைக்கடையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி வெள்ளிக்கிழமையன்று செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்திய சசிபெருமாள் மரணமடைந்தார்.

சசிபெருமாள் உடல் பிரேத பரிசோதனை நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. டாக்டர்கள் ராஜேஷ், ஜான்சன் உள்பட 3 பேர் பிரேத பரிசோதனை செய்தனர். 11.35 மணிக்கு பிரேத பரிசோதனை முடிவுக்கு வந்தது. இதனை மருத்துவமனை நிர்வாகமும், போலீசாரும் வீடியோவில் பதிவு செய்தனர்.
பிரேத பரிசோதனை முடிந்ததும், டாக்டர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 2 நாட்களில் அவர்கள் பிரேத பரிசோதனை அறிக்கையை போலீசாரிடம் அளிப்பார்கள் என தெரிகிறது. சசி பெருமாளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அரசியல் கட்சியினர் கூறியதாலேயே பிரேத பரிசோதனை செய்யும் போது வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே சசி பெருமாள் சாவுக்கு அவரது கழுத்தில் கயிறு இறுக்கியதே காரணம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது கழுத்தில் கயிறு இறுக்கிய காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
சசிபெருமாள் இறப்பு இயற்கைக்கு மாறான மரணம் (சிஆர்பிசி-174) என மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சசிபெருமாள் தனக்கு தானே கழுத்தில் கயிறு மாட்டி தொங்கியதாகவும் போலீசார் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தில் கயிறு இறுக்கிய தடம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications