வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பதா? கொதித்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்
சென்னை: நம்முடைய மரபோடும், உறவோடும், ரத்தத்தோடும் கலந்துவிட்ட ஜல்லிகட்டு நடத்தப்பட வேண்டும். இதற்காக போராட்டங்கள் நடத்தி நம்முடைய கலாசாரத்தை, மரபையும் அழிக்கும் செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சமத்துவமக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு பிரச்சினையில் வெற்றி கிடைக்கும் என்பதால் யாரும் தங்களுக்கு சொந்தமான காளைகளை விற்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு, விவசாயம், நாட்டு இனமாடுகள், ஜல்லிக்கட்டு, எருதுவிடும் திருவிழா, மஞ்சுவிரட்டு, ஊர்மாடு, வடமாடு, எருதாட்டம், மாட்டு வண்டி பந்தயம், கோவில் சம்பிரதாயம் மற்றும் திருவிழா ஆகியவற்றை அழியாமல் தடுக்கவும், விவசாயத்துக்கு பயன்படுத்தும் காளை மாடுகளை காப்பாற்ற கோரி, மத்திய மாநில அரசை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

உண்ணாவிரதம்
இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் பி.ராஜசேகர் தலைமை தாங்கினார். போராட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து பாஜக மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் மற்றும் இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பேசினர்.

விரைவில் ஜல்லிக்கட்டு
இந்த உண்ணாவிரதத்திற்கு ஆதரவு அளித்து கலந்து கொண்டது நெகிழ்ச்சி அளிப்பதாக தமிழிசை தெரிவித்தார். மேலும் ஜல்லிக்கட்டு நடைபெற. பாஜக பல முயற்சிகள் மேற்கொண்டதாகவும் எனினும் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பினால் தான் தாமதமாகிறது எனவும் அவர் தெரிவித்தார். மேலும் இந்ந உண்ணாவிரத்தை பற்றி மேலிடத்திற்கு தெரிவிப்பதாகவும் ஜல்லிக்கட்டு விரைவில் நடைபெற ஏறபாடு செய்வதாகவும் அவர் உறுதிமொழியளித்தார்.

சரத்குமார் பேச்சு
உண்ணாவிரத போராட்டத்தை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ, நேற்று மாலை பழரசம் வழங்கி முடித்து வைத்தார். தமிழர்களின் கலாசார வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு. இதனுடன் எருதுபிடிப்பு, காளைபிடிப்பு உள்ளிட்ட வீரவிளையாட்டுகளும் அடங்கும்.

காளைகளை துன்புறுத்துவதா?
பெண்ணை கட்டி கொடுப்பதாக இருந்தாலும் காளையை அடக்குபவர்களுக்கு தான் கட்டி கொடுத்த காலமும் இருந்தது. வீரத்தின் வெளிப்பாடாக தான் ஜல்லிக்கட்டு நம்முடைய கலாசாரத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக சிலர் கூறுகின்றனர். ஸ்பெயின் நாட்டில் காளைகளை ஈட்டியால் குத்தி கொல்லும் போட்டியை பலர் சுற்றியிருந்து வேடிக்கை பார்ப்பார்கள். ஆனால் அதுபோன்று எதுவும் இங்கு காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை. மாறாக குழந்தையாக பாவித்து தான் காளைகள் வளர்க்கப்படுகின்றன.

வீரத்தை மாற்ற முடியாது
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பவர்களில் சிலர் காளைகள் முட்டுவதால் உயிர் இழப்பதாக கூறுகின்றனர். அப்படி பார்த்தால் கார் பந்தய போட்டிகளில் கார்களை 250 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டி விபத்தில் சிக்கி உயிர் இழக்கின்றனர். இதனை தடை செய்ய வேண்டியது தானே. நடந்து சென்றாலும், விமானத்தில் சென்றாலும் விபத்து ஏற்படுகிறது.

வீரத்தை மாற்றமுடியாது
இதற்காக இவற்றை எல்லாம் தடை செய்து விட முடியாது. நம்முடைய மரபோடும், உறவோடும், ரத்தத்தோடும் கலந்துவிட்ட ஜல்லிகட்டு நடத்தப்பட வேண்டும். இதற்காக போராட்டங்கள் நடத்தி நம்முடைய கலாசாரத்தை, மரபையும் அழிக்கும் செயலை தடுத்து நிறுத்த வேண்டும். உடையை மாற்றுவது போல் நம்முடைய உள்ளத்தையும், உணர்வையும், வீரத்தையும் மாற்றிவிட முடியாது.

தமிழக அரசு துணை நிற்கும்
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கும் நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நம்முடைய பண்பாட்டை மீட்டு எடுப்பதற்காக சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த விஷயத்தில் தமிழக அரசு நமக்கு உறுதுணையாக நிற்கிறது. எனவே நமக்கு வெற்றி கிட்டும் என்பதால் எவரும் காளைகளை விற்றுவிட வேண்டாம். காளைகளை பாதுகாப்போம்.

போராட்டத்திற்கு துணை
நம்முடைய உணர்வை மத்திய அரசிடம் காட்ட வேண்டும். மத்திய அரசு செவிசாய்க்கும். நம்முடைய போராட்டத்திற்கு துணை நிற்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதுடன், தமிழக அரசுக்கும் நாமும் துணை நிற்க வேண்டும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications