ஜெ. சொத்து குவிப்பு வழக்கு: பவானிசிங் ஆஜரானதற்கு எதிரான மனு மீது 21- ஆம் தேதி விசாரணை
டெல்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜரானதை எதிர்த்த மனு மீதான விசாரணை வரும் ஏப்ரல் 21-ந் தேதி விசாரனைக்கு வருகிறது.
ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் பவானிசிங் அரசு வழக்கறிஞராக ஆஜரானார். இதேபோல் மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையிலும் அரசு வழக்கறிஞராக பவானிசிங்கே ஆஜரானார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று கோரியும் தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன் பி.லோகூர், ஆர்.பானுமதி ஆகியோர் கொண்ட பெஞ்ச்சில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் நீதிபதிகள் மதன் பி.லோகூர் மற்றும் ஆர்.பானுமதி ஆகியோர் நேற்று தனித்தனியாக மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். அதாவது நீதிபதி மதன் பி.லோகூர், 'பவானிசிங் நியமனம் செல்லாது' என்றும் மற்றொரு நீதிபதி பானுமதி, ‘பவானிசிங் நியமனம் செல்லும்' என தீர்ப்பை வழங்கினர். இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், 3 நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் விசாரிக்கவும் பரிந்துரை இருவரும் செய்தனர்.
இதையடுத்து பவானி சிங் நியமனத்துக்கு எதிரான க. அன்பழகனின் மனு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் வரும் 21-ந் தேதி விசாரணைக்கு வரும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனுவை விசாரிக்கும் பெஞ்ச்சில் இடம்பெறும் நீதிபதிகள் பெயரை பின்னர் தலைமை நீதிபதி தத்து அறிவிப்பார் என்றும் தெரிவ்க்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications