சேப்பாக்கம் மைதானத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட 3 கேலரிகளை இடிக்க சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!!
சென்னை: சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 3 கேலரிகளை இடிக்க உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐ, ஜே, கே என்று 3 கேலரிகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அமைத்தது. இந்த கேலரிகளை அமைப்பதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், உரிய அரசு அமைப்புகளிடம் இருந்து முறையான அனுமதி எதுவும் பெறவில்லை என்று கூறி சென்னை மாநகராட்சி 3 கேலரிகளுக்கும் சீல் வைத்தது.
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், என்.வி. ரமணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக நடந்து வந்தது.
சென்னை மாநகராட்சி, சென்னை மாநகராட்சி பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகியவற்றின் சார்பில் வழக்கறிஞர் கிரி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் அகில் சிபல் ஆகியோர் ஆஜராகி வாதாடி வந்தனர்.
இந்த விசாரணையின் போது சர்ச்சைக்குரிய 3 கேலரிகளில் ஒன்றை இடித்துவிட்டு 2 ஐ பயன்படுத்த கிரிக்கெட் சங்கம் கோரியிருந்தது. ஆனால் பாதுகாப்பற்ற கேலரிகளை பயன்படுத்தவே அனுமதிக்கக் கூடாது என்று சென்னை மாநகராட்சி பெருநகர வளர்ச்சி குழுமம் வாதிட்டது.
இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கோரிக்கையை நிராகரித்து 3 கேலரிகளையும் இடிக்க உத்தரவிட்டனர்.
மேலும் விதிகளுக்கு மீறி கட்டப்பட்டுள்ளதால் இந்த கேலரிகளை பயன்படுத்த அனுமதிக்கவும் முடியாது; ஐ.பி.எல். போன்ற விளையாட்டுகளை விட பொதுமக்களின் பாதுகாப்புதான் மிகவும் முக்கியம் என்றும் கூறினர்.
இதே சர்ச்சைக்காக கடந்த ஆண்டு சென்னை மைதானத்தில் ஐ.பி.எல். போட்டிகள் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.