மதுரை: மு.க.அழகிரியின் தயா பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி
மதுரை: மதுரை திருமங்கலத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரிக்குச் சொந்தமான தயா பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதியளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தயா பொறியியல் கல்லூரியில் நடப்புக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நாளை முதல் வரும் 19ஆம் தேதிக்குள் நடத்த அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இம்மாதம் 28ஆம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்குமாறு தயா பொறியியல் கல்லூரி நிர்வாகத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில், கல்லூரியின் தரம் குறித்து அண்ணா பல்கலைக்கழகமோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ நேரில் ஆய்வு நடத்தி, குறைகள் இருப்பின் நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மதுரை தயா பொறியியல் கல்லூரியை நடத்துவதற்குத் தேவையான சான்றிதழ்கள் பெறவில்லை எனக்கூறி, அந்தக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி மறுத்தது.
இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சேர்க்கைக்கு அனுமதியளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை வரும் 21ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications