உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க முடியாது- திமுக தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு
சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை அக்டோர் 6ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும் இந்த மனுவுக்கு தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் பதில் அளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் மின்னணு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடக்கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திமுக அமைப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில், வாக்குச்சீட்டுகள் மூலம் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவை நடத்தினால் அதிகளவில் முறைகேடுகள் நிகழ வாய்ப்புகள் உள்ளன. எனவே மின்னணு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவை நடத்த உத்தரவிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் ரத்து செய்துவிட்டது. இதையடுத்து திமுக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி திமுக தரப்பில் தலைமை நீதிபதி டி.எஸ். தாகூர் அமர்வு முன்பு ஆஜராகிவாதிட்டார். அவர் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதால் திமுக மனுவை அவசர மனுவாக கருதி விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு திமுக மனுவை வெள்ளிக்கிழமையன்று விசாரிப்பதாக ஒத்திவைத்தனர்.
இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க முடியாது எனவும், இந்த மனுவுக்கு தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் பதில் அளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை அக்டோர் 6ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.












Click it and Unblock the Notifications