'சேரி பிஹேவியர்' காயத்ரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாயுமா?
சேரி பிஹேவியர் என்று சொன்ன நடிகை காயத்ரி ரகுராம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் நடிகை காயத்ரி ரகுராம் சேரி பிஹேவியர் என்று தலித் மக்களை கொச்சைப்படுத்தி பேசி இருக்கிறார். அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து அதில் பங்கேற்றுள்ள நடிகை காயத்ரி ரகுராம் கொச்சையாக பேசுவது, உடன் இருப்பவர்களை அவமானப்படுத்துவது என தொடர்ந்து செய்து வருகிறார். ஏற்கனவே அவர் 'எச்ச' என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து, தற்போது சேரி பிஹேவியர் என்று பேசி இருக்கிறார். இது தமிழகத்தில் உள்ள அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் மிக மோசமான கண்டனங்கள் இவருக்கு எதிராக எழுந்துள்ள நிலையில், வழக்கு தொடர்வதற்கான ஆயத்தங்களும் நடந்தேறி வருகின்றன.
குறிப்பாக, சேரி பிஹேவியர் என்று சொன்ன காயத்ரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது. இது தொடர்பாக, கள செயல்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் தனது பேஸ்புக்கில், "பிக் பாஸ் அல்ல. பிக் காஸ்ட். பட்டியல் சாதி மக்களை வார்த்தை ரீதியாக இழிவு படுத்துவது வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 கீழ் குற்றமாகும்.காயத்திரி என்பவர் சேரி பிஹேவியர் என்று இழிவு படுத்தி இருப்பதாக அறியவருகிறேன்.அந்த லிங்க் இருந்தால் அனுப்பவும். உயர் நீதி மன்றத்தில் வழக்கினை தாக்கல் செய்ய உதவியாக இருக்கும்" என பதிவிட்டுள்ளார்.
இதுதவிர பல்வேறு பதிவுகள் காயத்ரி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும் என்பதை வலியுறுத்தி பதிவிடப்படுகின்றன. எனவே, விரைவில் காயத்ரி ரகுராம் மீது வழக்கு பதியப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.