குட்டையில் குளியல்: ஒரு மாணவர் பலி, ஒருவர் கைது
சேலம்: சேலத்தில் கல்குவாரியில் உள்ள குட்டையில் குளிக்கும்போது 17 வயது மாணவன் வீசிய கருங்கல் தலையில்பட்டு 9ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக பலியானார்.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியை அடுத்த கல்பாரப்பட்டி நாடார் தெருவைச் சேர்ந்தவர் முருகன். விவசாயி. அவரது மகன் சதிஷ்(14). அவர் இளம்பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மதியம் 3 மணி அளவில் சதிஷ் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து புதுக்காடு பகுதியில் இருக்கும் கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்றார்.
30 அடி ஆழம் உள்ள அந்த குட்டையில் 10 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்தது. சதிஷ் குட்டையின் ஆழத்திற்கு சென்று குளித்தார். அப்போது அவருடன் குளித்துக் கொண்டிருந்த ஜே.ஜே. நகர் பகுதியைச் சேர்ந்த ராஜாமணி என்பவரின் 17 வயது மகன் ராம்குமார்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தண்ணீர் பகுதிக்கு மேல் நின்று அங்கிருந்து ஒரு கருங்கல்லை தண்ணீருக்குள் போட்டுள்ளார்.
அந்த கல் சதிஷின் தலையில் பட்டது. இதில் சதிஷ் மயங்கி நீரில் மூழ்கி பலியானார். சதிஷ் மூழ்குவதை பார்த்த சுகுமார்(13), கார்த்திகேயன்(15), மணிகண்டன்(15) ஆகியோர் நண்பனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த சேலம் தீயணைப்பு துறையினர் மற்றும் ஆட்டையாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சதிஷின் உடலை மீட்டனர். இதையடுத்து ராம்குமாரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications