வள்ளியூரில் மர்மக் காய்ச்சலுக்கு 7ஆம் வகுப்பு மாணவி பலி!
வள்ளியூரில் ஏழாம் வகுப்புப் படித்து வந்த மாணவி மானசா, மர்மக் காய்ச்சலுக்கு பலியானதால் அப்பகுதியில் சோகம் நிலவி வருகிறது.
நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூரில் காய்யச்சல் காரணமாக ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி இறந்ததால் அங்கு மக்கள் பீதியடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அண்ணாநகரை சேர்ந்தவர் மைக்கின். இவருக்கு சுதா என்ற மனைவியும், மானசா என்ற மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். மானசா அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் காய்ச்சலால் மானசா அவதிப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சலுடன் வாந்தியும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரவில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை தாய் சுதா அழைத்து சென்றுள்ளார். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் இங்கு போதிய வசதியில்லை என்று கூறி திரும்பி அனுப்பியுள்ளனர்.
அதனையடுத்து மானசாவை தாய் சுதா நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்ததால் குடும்பத்தினரும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர்.
மானசா வீட்டின் அருகே சாக்கடை கழிவு நீர் கால்வாய் செல்கிறது. இந்த கழிவு நீர் கால்வாய் நீண்ட நாட்களாக சுத்தப்படுத்தப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்காணிக்க வேண்டிய சுகாதார துறையினரும் அப்பகுதிக்கு நீண்ட நாட்களாக வரவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை சுத்தப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications