அருப்புக்கோட்டை அருகே வகுப்பறையில் மாணவன் வெட்டிக்கொலை: ஓரினச் சேர்க்கை காரணமா?
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்த பந்தல்குடியில் 8ஆம் வகுப்பு மாணவன் பள்ளி வகுப்பறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டதால் பதற்றம் உருவாகியுள்ளது. ஓரினச்சேர்க்கையே கொலைக்கு காரணம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட மாணவனின் பெயர் பாஸ்கர் என்பதாகும். இவர் அயன்கரிசல் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால் என்பவரின் மகனாவார். இவர் பந்தல்குடியில் உள்ள அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று காலை 9 மணியளவில் பள்ளி துவங்கும் நேரத்தில் வகுப்பறைக்கு மாணவர்கள் செல்லத் தொடங்கினர். அப்போது 8 ஆம் வகுப்பில் 2 பெஞ்ச்களுக்கு இடையில் மாணவன் பாஸ்கரன் ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்தான்.
வகுப்பறையில் இருந்து அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவன் மாரீஸ்வரன் என்பவன் ஓடியுள்ளான். இதனைக்கண்டு அலறிய சகமாணவர்கள் ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு வந்த போலீசார், மாணவன் பாஸ்கரை மீட்டு அருப்புக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே மாணவன் உயிரிழந்துவிட்டான். அவனது உடல்மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவனை வெட்டிய மாரீஸ்வரன் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளன.
கொலை செய்யப்பட்ட மாணவன் பாஸ்கரனும், வெட்டியதாக கூறப்படும் முன்னாள் மாணவன் மாரீஸ்வரனும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். குடும்ப பகை, முன்விரோதமே கொலைக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்த மாணவன் மாரீஸ்வரன் மனநோயாளியாக இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்து கூறியுள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஜெயக்குமார், மாணவன் பாஸ்கரன் கொலை தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக தெரிவித்தார். இந்த இரண்டு மாணவர்களும் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வார்கள் என்றும், ஆனால் பள்ளிக்கு வெளியேதான் இந்த சண்டை நடைபெறும் என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த சண்டை ஆசியர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை என்றும் அவர்கள் கூறினர்.
முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்களுக்கு இடையேயான மோதலை முன்கூட்டியே தடுத்திருந்தால் கொலை நடைபெறாமல் தடுத்திருக்கலாம் என்றும் பெற்றோர்கள் புகார் கூறியுள்ளனர்.
இதுகுறித்து அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கொலை சம்பவம் காரணமாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
இதனிடையே அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள பாஸ்கரன் உடலை பார்த்து கதறி அழுத தாயார் தேவி மயங்கி விழுந்தார். மாரீஸ்வரனை உடனடியாக கைது செய்யக்கோரி, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையின் முன்பு சாலையில் அமர்ந்து உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினார்கள். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.
பாஸ்கரனை குத்தி கொன்ற மாரீஸ்வரன் பற்றி தற்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன. இதே பள்ளியில் பிளஸ்-1 படித்து பெயிலான மாரீஸ்வரன், கடந்த 6 மாதமாக பள்ளிக்கு வர வில்லை. இவனுக்கு ஓரின சேர்க்கையில் அதிக ஈடுபாடு உண்டு.
சில மாதங்களுக்கு முன்பு மாரீஸ்வரன், இதே பள்ளி மாணவர்கள் பாஸ்கரன் உள்பட 5 பேரை ஓரின சேர்க்கைக்கு அழைத்து சென்று இருக்கிறான். இதில் பாஸ்கரன் உடன் படவில்லை. இந்த சம்பவத்தால் பாஸ்கரன் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று இருக்கிறான்.
இந்த சம்பவம் குறித்து பந்தல்குடி போலீசார் விசாரணை நடத்தி சமரசம் செய்தார்கள். இதனால் மாரீஸ்வரன், பாஸ்கரன் மீது ஆத்திரம் அடைந்து கொலை செய்து இருக்கிறான். மேலும் மாரீஸ்வரன் மீது கடந்த ஆண்டு 2 மாணவிகளை கடத்தி சென்றதாக மாசார்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது பள்ளிகளில் மாணவர்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. கடந்த12ஆம் தேதி நிலக்கோட்டையை அடுத்த விளாம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் மரணத்தில் முடிந்தது. மாணவர்களுக்கு இடையேயான முன்விரோதம் காரணமாக ப்ளஸ் 1 படித்து வந்த வினோத் என்ற மாணவர் உயிரிழந்தார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது 8ஆம் மாணவர் வகுப்பறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.