லீவு லெட்டரில் உண்மை காரணம் தெரிவித்த மாணவன்... நெகிழ்ச்சியடைந்த ஆசிரியர்
விடுப்பு எடுக்க உண்மை காரணம் தெரிவித்த மாணவனை கண்டு ஆசிரியர் ஒருவர் நெகிழ்ச்சியடைந்துள்ளாராம்.
தேனி : விடுப்பு எடுக்க உண்மை காரணம் தெரிவித்த மாணவனை கண்டு ஆசிரியர் ஒருவர் நெகிழ்ச்சியடைந்துள்ள சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நம்மில் பல பேர் விடுப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என்றால் முதலில் நமக்கு தோன்றுவது " அஸ் ஐ யம் சப்பரீங்க் ஃப்ரம் பீவர் " போன்ற வார்த்தைகள் தான். விடுப்பு எடுக்க பல காரணம் இருந்தாலும் உடம்பு சரியில்லை , அதனால் தனக்கு விடுப்பு வேண்டும் என்று தான் நாம் கேட்போம். அதுவே மாணவர்கள் விடுப்பு எடுக்க நடைமுறை பழக்கமாகவும் ஆகிவிட்டது.

மேலும் அவ்வாறு விடுப்பு கடிதத்தில் தெரிவித்தால் தான் ஆசிரியர் எவ்வித கண்டிப்பும் இல்லாமல் விடுப்பு எடுக்க அனுமதி வழங்குவார் என்பது மாணவர்களின் கூற்று.
தேனி மாவட்டம் வருசநாடு அருகிலுள்ள பூசணியூத்து கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஈஸ்வரன் என்ற மாணவர் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவன் தனது ஆசிரியருக்கு எழுதிய விடுப்பு கடிதம் சற்று வித்தயாசமானது.
அந்த விடுப்பு கடிதத்தை பிரித்து படித்த ஆசிரியர் வெங்கட் நெகிழ்ந்து விட்டாராம். காரணம் மாணவன் ஈஸ்வரன் அந்த கடிதத்தில் உண்மை காரணங்களை குறிப்பிட்டது தான்.
அதாவது " என் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கால்நடைகளை பார்த்துக்கொள்ள வேண்டியுள்ளது இன்று ஒருநாள் மட்டும் விடுப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்', என்று மாணவன் ஈஸ்வரன் கடிதத்தில் எழுதியிருந்தான்.
இந்த கடிதத்தின் மூலம் அந்த மாணவனின் நேர்மையும், தனது தாய் மீது அவன் வைத்திருக்கும் அன்பு மற்றும் கால்நடைகள் மீது அவன் வைத்திருக்கும் பாசம் முதலியவை வெளிபட்டிருக்கிறது. இதனால் சமூக வலைதளத்தில் ஈஸ்வரன் எழுதிய கடிதம் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

இது குறித்து ஆசிரியர் வெங்கட் பேசுகையில் , மாணவன் ஈஸ்வரனின் விடுப்பு கடிதம் படித்து நெகிழ்ச்சியடைந்தேன். மறுநாள் பள்ளிக்கு வந்த அவனிடம் கடிதம் குறித்து கேட்டேன். அதற்கு அவன் ' சார், நீங்கதானே உண்மை எதுவாக இருந்தாலும் அதைப் பேசுங்கனு சொல்லிக் கொண்டே இருப்பீர்கள் என்று என்னிடம் கூறினான். அப்போது தான் நாம் சொல்லும் சில வார்த்தைகள் மாணவர்களின் மனதில் ஆழமாக பதிகிறது என்பதை நான் உணர்ந்தேன் என்று ஆசிரியர் கூறினார்.
இளம் வயதில் உண்மையையே பேசி வளரும் ஈஸ்வரன் போன்ற மாணவர்கள் நிச்சயம் எதிர்காலத்தில் நல்ல மனிதர்களாக இருப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.












Click it and Unblock the Notifications