அரசுப் பள்ளியில் மது விருந்து: கொண்டாட்டத்தில் மாணவர்கள்; அதிர்ச்சியில் ஆசிரியர்கள் !
வேலூர்: அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சக மாணவரின் பிறந்தநாளை பள்ளி வளாகத்திலேயே 12 மாணவர்கள் மது அருந்தி கொண்டாடி, வகுப்பறைக்கு போதையில் வந்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அரக்கோணம் ஓச்சேரி சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 342 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை மதியம் பள்ளி தொடங்கிய நிலையில், மேல்நிலை வகுப்புக்கு வந்த மாணவர்களுக்கு ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போது பின் வரிசையிலும், நடுவரிசையிலும் அமர்ந்திருந்த மாணவர்கள் சிலர் தேவையில்லாத சந்தேகங்களை எழுப்பிக் கொண்டே இருந்ததாகத் தெரிகிறது. அவர்கள் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஆசிரியை, அதுகுறித்து காரணம் அறிய அருகில் சென்றுள்ளார். அப்போது அவர்கள் மது அருந்தியிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர், தலைமை ஆசிரியரின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.
தலைமை ஆசிரியர் மாணவர்களிடம் விசாரணை நடத்தியதில், 12 பேர் மது அருந்தியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 12 பேரையும் வகுப்பில் இருந்து வெளியேற்றிய தலைமை ஆசிரியர், காலையில் நல்ல முறையில் இருந்த மாணவர்கள், மதியம் மது அருந்தியிருந்தது எப்படி என விசாரித்துள்ளார்.
இதில், அந்த மாணவர்களில் ஒருவருக்கு அன்று பிறந்த நாள் என்பதும், இதையடுத்து அந்த குறிப்பிட்ட மாணவர், பள்ளி வளாகத்தில் பயனற்ற நிலையில் உள்ள கட்டிடத்துக்கு உடன் பயிலும் 11 மாணவர்களை அழைத்துச் சென்று மது விருந்து வைத்ததும் தெரியவந்தது. இந்த மாணவர்களில் 4 பேர் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறுவோர் என்பதும், மற்ற ஐந்து பேர் சாதாரண மதிப்பெண் பெறுவோர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தும், அவ்வப்போது பள்ளி மாணவர்கள் மது அருந்தும் சம்பவங்கள் நிகழ்வது வேதனைக்குரியது.












Click it and Unblock the Notifications