சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் நாளை பள்ளிகள் திறப்பு.. ஆசிரியர்கள் 'ரெடி'.. மாணவர்கள்?
சென்னை: கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மூடப்பட்டிருந்த பள்ளிகள், கல்லூரிகள் நாளை திறக்கப்படவுள்ளன. இதையடுத்து பள்ளிகளில் சுத்தப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
தொடர் மழை காரணமாக இந்த மூன்று மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. தீபாவளிக்கு முதல் நாளிலிருந்து விடுமுறை விடப்பட்டு வருகிறது. இடையில் 3 நாட்கள் மட்டும் பள்ளிகள், கல்லூரிகள் இயங்கின. பின்னர் மீண்டும் மழையும் பெரு வெள்ளமும் குறுக்கிட்டதால் மீண்டும் விடுமுறை விடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் நாளை முதல் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன.
அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு
தொடர் மழை மற்றும் விடுமுறை காரணமாக அரையாண்டுத் தேர்வுகளை ஜனவரி மாதத்திற்கு தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது. பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் வெள்ளப் பாதிப்புக்குள்ளான பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சுத்தம் செய்யும் பணி
தற்போது மழை விட்டு விட்ட நிலையில் பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இருப்பினும் பல பள்ளிகளில் இன்னும் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதால் அங்கு பள்ளிகள் நாளை திட்டமிட்டபடி திறக்கப்படுமா என்பது சந்தேகம்தான்.
மழை குறையும்
தற்போது வட கடலோரத்தில் மழை குறையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென் கடலோரத்தில்தான் மழை அதிகமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.
திறக்க வாய்ப்பு
எனவே காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்றே தெரிகிறது. ஒரு வேளை இரவில் ஏதாவது வானிலையில் மாற்றம் ஏற்பட்டு கன மழை பெய்தால் நிலைமை மாறலாம்.
அவசரப்பட்டு திறப்பது நல்லதா?
ஆனால் பொதுமக்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகிறது. அதாவது சென்னை மாநகரமே குப்பைக் காடாக காணப்படுகிறது. பல இடங்களில் இன்னும் ஈரம் உலரவில்லை. எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாக உள்ளது. இந்த நிலையில் அவசரப்பட்டு பள்ளிகளைத் திறந்தால் சிறார்களுக்கு பல்வேறு விதமான நோய் பாதிப்புகள் வரலாம் என்று பெற்றோர் அஞ்சுகின்றனர்.
பள்ளிகள் சரியாக உள்ளதா?
மேலும் சென்னை நகரில் பல பள்ளிகள் உள்ள பகுதிகள் இன்னும் குப்பைக் காடாகத்தான் உள்ளன. சுற்றுப்புறம் சுத்தமாக உள்ளது என்று கூற முடியாத நிலை. இதுவும் சிறார்களின் சுகாதாரம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்ததால் இன்றும் சென்னையில் பல பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது.
புறநகர்களைச் சொல்ல வேண்டியதில்லை
சென்னையின் நிலை இப்படி என்றால் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட புறநகர்ப் பகுதிகளில் நிலைமை இன்னும் மோசம். சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. ஆங்காங்கே சாக்கடை போல தண்ணீர் தேங்கியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் மாணவ, மாணவியர் எப்படி பத்திரமாக பள்ளிகளுக்குப் போய் வர முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சில பள்ளிகளைத் தவிர
இருப்பினும் தற்போது முகாம்களாக செயல்படும் பள்ளிகளைத் தவிர மற்ற பள்ளிகள் திறக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அதற்கேற்ப பிற பள்ளிகளும் திறப்புக்கு ஏற்ப தயாராகி வருகின்றன.
பெற்றோர்கள் கவனத்திற்கு
பள்ளிகள் திறக்கட்டும், பாடங்களையும் முடிக்கட்டும். தவறில்லை. அதேசமயம், உங்களது பிள்ளைகளின் பாதுகாப்புக்கும், சுகாதாரத்திற்கும் பிரச்சினை இல்லை என்று உணர்ந்தால் பிள்ளைகளை அனுப்புங்கள். இல்லாவிட்டால் அது பொறுத்திருந்தே அனுப்புங்கள். தவறில்லை.