தொடரும் கனமழை: சென்னை உட்பட 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விமுறை!
சென்னை: கனமழை காரணமாக சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதகளில் கனமழை இன்னும் ஓயாமல் பெய்துவருகிறது. இதனால் கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த நான்கு வாரங்களாக தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. மழையின் அளவு குறைந்ததை அடுத்து, இன்று பள்ளி, கல்லூரி திறக்கவிருந்த நிலையில் மீண்டும் மழை மிரட்டி வருகிறது.
எனவே சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டத்திலும் மழை பெய்து வருவதால் இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் மீண்டும் தொடர் மழை பெய்து வருவதால் புதுசேரி, காரைக்கால் பகுதி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல், ராமநாதபுரத்தில்..
திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரத்தில் தாழ்வான இடங்களில் இருக்கும் பகுதிகள் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கனமழை காரணமாக இம்மாதம் நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.